குடந்தையில் 94 குழந்தைகளைப் பலி கொண்ட தீவிபத்து - பெற்றோர் கண்ணீராஞ்சலி
கும்பகோணம்: கும்பகோணத்தில், பள்ளிக்கூட தீவிபத்தில் 94 பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக பலியானதன் 5ம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.
2004ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய இரு சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது. ஒன்று சுனாமி, இன்னொன்று கும்பகோணம் ஸ்ரீகிருஷ்ணா பள்ளி தீவிபத்து.
கும்பகோணம் பள்ளியில், ஜூலை 16ம் தேதி காலையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், 94 பச்சிளம் குழந்தைகள் கொடூரமாக பலியாகி கருகிப் போயின.
இந்தக் கொடுமையான விபத்திலிருந்து 18 குழந்தைகள் காயத்துடன் உயிர் தப்பினர்.
குழந்தைகள் இறந்து நேற்று 5வது ஆண்டு நினைவு தினமாகும்.
கும்பகோணம் பழைய பாலக்கரையில் பலியான குழந்தைகளின் நினைவாக ரூ. 60 லட்சம் செலவில் தமிழக அரசு நினைவு மண்டபத்தை அமைத்துள்ளது. இங்கு பூங்கா, தியான மண்டபம், நீரூற்றுகள் உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில் நேற்று 5வது நினைவு தினத்தையொட்டி குழந்தைகளைப் பறி கொடுத்த பெற்றோர் தங்களது வீடுகளிலும், குழந்தைகளை அடக்கம் செய்த இடுகாடுகளிலும் சென்று கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
காசிராமன் தெருவில் உள்ள ஸ்ரீகிருஷ்ணா பள்ளி முன்பும் பெற்றோர்கள் கூடி படங்களுக்கு மலரஞ்சலி செலுத்தியும், விளக்கேற்றியும் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் சண்முகமும், பிற அதிகாரிகளும் இங்கு வந்து குழந்தைகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.
ஏராளமான பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவியரும் பெரும் திரளாக வந்து அஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications