தடையில்லாமல் ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம்
சட்டசபையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு எம்எல்ஏ குணசேகரன் பேசுகையில், தமிழ்நாட்டின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை தடையில்லாமல் நடத்த தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்று கேட்டார்.
இதற்கு பதிலளித்த கால்நடைத்துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி,
ஜல்லிக்கட்டு விளையாட்டை தடை இல்லாமல் நடத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிமன்றம் வழங்கிய உத்தரவில் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளித்து மாநில அரசு ஒரு சட்டம் கொண்டு வரலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் வரும் திங்கள்கிழமை ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு அவசர சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் கொண்டு வரப்படவுள்ளது என்றார்.
அனைத்து மாவட்டங்களிலும் மாராதான்..
விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் மைதீன்கான் கூறுகையில்,
இந்த ஆண்டு கோவையில் ரூ.1.75 கோடி மதிப்பில் நீச்சல்குளம் அமைக்கப்படும். தமிழ்நாட்டில் 8 இடங்களில் விளையாட்டு அரங்கங்கள் கட்டும் பணி நடந்து வருகிறது.
மராத்தான் ஓட்டம் சென்னையில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதல் அனைத்து மாவட்டங்களிலும் இது நடத்தப்படும்.
சென்னை நேரு ஸ்டேடியத்தில் விளையாட்டு வீரர்களின் திறமையை மேம்படுத்த கம்ப்யூட்டர் முறையில் பயிற்சி அளிக்க ஆலோசனை மையம் அமைக்கப்படும்.
விளையாட்டு பள்ளி, விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுபடி ரூ.40லிருந்து ரூ.75 ஆக உயர்த்தப்படும். விளையாட்டு சீருடைக்காக வழங்கப்படும் ரூ.1,200 இனி ரூ.3,000 ஆக உயர்த்தப்படும்.
கபடி போட்டி பயிற்சியின்போது காயம் ஏற்படுவதை தடுக்க செயற்கைமெத்தை பயன்படுத்தப்படுகிறது. இதன் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை, விழுப்புரம், திருச்சி, சேலம், கோவை, திருவாரூர், திருவண்ணாமலை மாவட்டங்களுக்கு செயற்கை கபடி மெத்தை வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.