கருணாநிதிக்கு மட்டும் தனி உரிமையா?-சிபிஎம்
சென்னை: சென்னையில் போராட்டங்கள் நடத்த 3 இடங்களை மட்டுமே அரசு ஒதுக்கியுள்ளது. வேறு இடங்களில் போராட்டம் நடத்தத் தடை உள்ளது. ஆனால் முதல்வர் கருணாநிதி மட்டும் அண்ணா சமாதியில் போய் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தலாமா. அவருக்கு மட்டும் தனி உரிமை ஏன் என்று சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி கேட்டதால், அவருக்கும், அமைச்சர்களுக்கும் இடையே கடும் வாதம் மூண்டது.
சட்டசபையில் காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது.
பாலபாரதி (சிபிஎம்): தொழிலாளர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கைகள் மேற்கொள்வது துரதிருஷ்டவசமானது. கோவையில் அமைதியான முறையில் போராட்டம் நடத்திய 3 ஆயிரம் பேரை போலீசார் கடுமையாக தாக்கியுள்ளார்கள். தொழிலாளர்களை அடிக்காமல் இருந்த காவலரை துணை கமிஷனர் கன்னத்தில் அறைந்துள்ளார்.
எவ்வளவு அடித்தாலும் இவர் தாங்கறாருடா. இவரு ரொம்ப நல்லவருப்பா என்று திரைப்படத்தில் நடிகர் வடிவேலு சொல்வது போல், மக்களை தொடர்ந்து போலீசார் தாக்குவது தவறானது. ஆயுதம் வைத்திருக்கும் இவர்கள், நிராயுதபாணியாக இருப்பவர்களை தாக்குகிறார்கள். அவர்கள் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்வதில்லை. தொழிற்சங்கம் அமைத்தால் கூட பொய் வழக்கு போடுகிறார்கள். தி.மு.க-வின் கொள்கை இப்படி போலீசார் வாயிலாக நடைபெறுகிறதா?
சென்னையில் போராட்டம் நடத்துவதற்கு புதிய இடங்களை ஒதுக்கவேண்டும். மெமோரியல் ஹால், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை உள்பட 3 இடங்களில் மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், முதல்-அமைச்சர் கருணாநிதி அவர்கள், அண்ணா சமாதியில் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உரிமையை அவர் எடுத்துக் கொள்கிறார். அந்த உரிமை மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டாமா? எம்.எல்.ஏ.க்களுக்கு கூட அந்த உரிமை இல்லை.
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: இலங்கை தமிழர் பிரச்சினைக்காகத்தான் முதல்-அமைச்சர் கருணாநிதி உண்ணாவிரதம் இருந்தார். அவர் அதிகாலையில் வீட்டில் கூட சொல்லாமல் ஒரு சமுதாயத்தை காப்பதற்காக உண்ணாவிரதம் இருந்தார். முன்னாள் முதல்-அமைச்சர் கூட அங்கு உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்.
பாலபாரதி: முன்னாள், இந்நாள் முதல்-அமைச்சர்கள் அங்கு உண்ணாவிரதம் இருக்க உரிமை எடுத்துக் கொள்வதற்கு மாற்று கருத்து இல்லை. அதை விமர்சனம் செய்யவில்லை. எல்லோருக்கும் எல்லாம் சமம். அங்கு எம்.எல்.ஏ. உள்பட மற்றவர்களுக்கு போராட்டம் நடத்த உரிமை இல்லை என்பது எப்படி சரி?
அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மார்க்சிஸ்ட் கட்சி மட்டுமல்ல; தி.மு.க.-வுக்கு கூட அங்கு போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.
பாலபாரதி: தி.மு.க.வுக்கும் சேர்த்துத்தான் நான் கேட்கிறேன். இப்போது போராட்டம் நடத்தும் உணர்வு பெரிதும் மங்கி வருகிறது. முன்பு, முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து போராட்டம் நடத்தினார்கள். இப்போதெல்லாம் அப்படி போராட்டம் நடத்தினால் ரெயிலை நிறுத்தாமல் ஏற்றிவிட்டுச் சென்றுவிடும் நிலை உள்ளது.
அமைச்சர் பொன்முடி: அப்போது போராட்டம் நடத்தினாலும், அதற்குரிய தண்டனையை கொடுத்தால் அதை அனுபவிப்பதற்காக தயாராக இருந்ததால்தான் போராட்டம் நடத்தினோம்.
பாலபாரதி: போராடுவதற்கு உரிமை தரவேண்டாமா?
அமைச்சர் பொன்முடி: போராட வேண்டும் என்ற உணர்வு தானாக வரவேண்டும். போராட்டம் இல்லாத வகையில் இப்போது முதல்-அமைச்சரின் ஆட்சி அமைந்துள்ளது.
ஜி.கே.மணி (பா.ம.க.): கோரிக்கைகளை ஜனநாயக முறையில் எடுத்து வைக்க உரிமை உண்டு. அமெரிக்காவில் வெள்ளை மாளிகை முன்பாகக் கூட போராட்டம் நடத்த அனுமதி உண்டு. எனவே, சென்னையில் போராடுவதற்கு பெரிய இடம் ஒதுக்கித் தரவேண்டும்.
பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்): மேற்கு வங்கத்தில் சிங்கூரில் கூட அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினார்களே. அங்கும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதே.
பாலபாரதி: அதற்கு அந்த மாநில முதல்-அமைச்சர் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். தவறை மூடி மறைக்கவில்லை. இங்கு வைக்கப்பட்டுள்ள கொள்கை விளக்கக் குறிப்பில், சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் பாதிக்கவில்லை என்று சொல்லி இருக்கிறீர்கள். ஆனால், சட்டம்-ஒழுங்கு தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளது என்றார் பாலபாரதி.