வரதட்சணை வழக்குகள்-போலீஸ் தலையிட தடை
சென்னை: வரதட்சணைக் கொடுமை வழக்குகளில் எடுத்த எடுப்பிலேயே போலீஸார் தலையிடக் கூடாது. மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, அவர்கள் புகார் கொடுத்தால் மட்டுமே தலையிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பளித்துள்ளது.
சென்னை சூளைமேட்டை சேர்ந்த வக்கீல் மாலினி என்பவர் இதுதொடர்பாக ஒரு வழக்கு தொடர்ந்திருந்தார்.
அதில், பெண்கள் பலர் கணவர் மற்றும் கணவர் குடும்பத்தினரை பழிவாங்கும் நோக்கத்தில் அவர்கள் மீது வரதட்சணை புகார் கொடுக்கிறார்கள்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து கணவரையும், குடும்பத்தாரையும் மிரட்டுதல், துன்புறுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே இந்த வழக்கில் போலீஸ் முதலிலேயே நேரடியாக தலையிடுவதை தடுக்க வேண்டும். அதிகாரிகளை கொண்டு விசாரணை நடத்தி அதன் பிறகு உண்மை இருந்தால் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி கோகலே, நீதிபதி முருகேசன் தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தலைமை செயலாளர் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அதில் வரதட்சணை புகார்களை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூக நல அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,
வரதட்சணை புகாரை விசாரிக்க மாவட்டந்தோறும் சமூகநல அதிகாரிகளை நியமித்து இருப்பதாக அரசு தெரிவித்து உள்ளது.
புகார்கள் வந்ததும் இனி அவர்கள்தான் விசாரிப்பார்கள். அவர்கள் அதிரடி சோதனை போன்றவற்றையும் நடத்தலாம். விசாரணையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்றம் இருப்பது தெரிந்தால் போலீசார் வழக்குப்பதிவு செய்ய சிபாரிசு செய்யலாம். அதன்பிறகே போலீசார் இதில் தலையிடலாம்.
சமூகநல அதிகாரிகள் விசாரித்து முடிவு சொல்லும் வரை இதில் போலீசார் தலையிடக்கூடாது என்று உத்தரவிட்டனர்.












Click it and Unblock the Notifications