சென்னையில் திடீர் கன மழை - வெயில் தணிந்தது
சென்னை: சென்னையில் கடந்த 2 மாதங்களாக வாட்டி வதக்கி வந்த கடும் வெப்பத்திற்கு நேர் மாறாக, நேற்று இரவு கன மழை பெய்து நகரை குளிர்வித்தது.
அக்னி நட்சத்திர வெயில் மே 28ம் தேதியுடன் முடிந்து போனது. ஆனால் அதன் பிறகும் வெயில் குறையாமல் தொடர்ந்து வெளுத்து வந்தது.
பகல் நேரங்களில் கடல் காற்று வீசுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வந்தது.
நேற்றும் அதேபோல பகலில் நல்ல வெயில் அடித்தது. ஆனால் மாலையில் நிலைமை அப்படியே மாறியது.
மேகம் கருத்து, பலத்த காற்று வீசத் தொடங்கியது. சற்று நேரத்தில் கன மழை கொட்டத் தொடங்கியது. குறைந்த நேரமே பெய்தாலும் கொட்டு கொட்டென்று மழை கொட்டித் தீர்த்து விட்டது. இதனால் உஷ்ணம் அப்படியே தணிந்து குளுமை குடியேறியது.
இந்த திடீர் மழையால் சென்னை மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த மழை குறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், அடுத்த 48 மணி நேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திர மாநிலங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது.
தமிழகத்தில் வறண்ட வானிலை காரணமாக 4 நாட்களாக வெயில் கடுமையாக காணப்படுகிறது. இதனால் வளிமண்டலத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டுள்ளது.
இதனால் 2 நாட்களுக்கு காலை, மாலை நேரங்களில் இடியுடன் மழை பெய்யும். சென்னையில் காலை நேரங்களில் தரையை நோக்கி வீசவேண்டிய கடல் காற்று மதிய நேரங்களில் வீசுவதால் வளி மண்டலத்தில் வெப்ப சலனம் ஏற்பட்டு நேற்று மாலை சென்னை மற்றும் புறநகரில் பலத்த மழை பெய்தது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications