துவரம் பருப்பை எண்ணி போட சொன்ன ஓ.பி!
சென்னை: துவரம் பருப்பு விலை வரலாறுகாணாத வகையில் உயர்ந்துவிட்டதால், தனது மனைவியிடம் துவரம் பருப்பை அள்ளிப் போடாமல் எண்ணிப் போடுமாறு கூறியுள்ளதாக அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம் கூறினார்
துவரம் பருப்பு விலை உயர்வு குறித்து சட்டசபையில் இன்று சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
அப்போது பேசிய பன்னீர்செல்வம், காலையில் எனது மனைவி துவரம் பருப்பு விலை கடுமையாக உயர்ந்துவிட்டதை சுட்டிக் காட்டி இந்த நிலையில் எப்படி சாம்பார் வைப்பது என்று கேட்டார்.
நான், பருப்பை அள்ளிப் போடுவதற்கு பதில் எண்ணிப் போட்டு சாம்பார் வைக்கச் சொல்லிவிட்டு வந்தேன். அந்த நிலையில் இருக்கிறது துவரம் பருப்பின் விலை என்றார்.
முன்னதாக உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:
விஷ்ணு பிரசாத் (காங்கிரஸ்): மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் அண்ணன் எம்.ஜி.சக்கரபாணியின் மகன் சங்கரன் வறுமையில் வாடுகிறார். அவரது மனைவி அரசு வீடு கோரி விண்ணப்பித்துள்ளார். அவர்களுக்கு வீடு ஒதுக்கப்படுமா?.
முதல்வர் கருணாநிதி: இது குறித்து எனக்கு எந்தவித தகவலோ, மனுவோ வரவி்ல்லை. மனு வந்தால் நிச்சயம் அவர்களுக்கு வீடு வழங்கப்படும்.
வேல்முருகன் (பாமக): பண்ருட்டி பகுதியில் கட்டப் பஞ்சாயத்துக் கும்பல் மீது அரசு நடவடிக்கை எடுக்குமா?
முதல்வர்: கந்துவட்டி, கட்டப் பஞ்சாயத்து இரண்டையும் ஒடுக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.
எஸ்வி.சேகர் (அதிருப்தி அதிமுக): கி.வா.ஜெகன்னாதன் பெயரில் சாலை அமைக்க வேண்டும், நேப்பியர் பூங்காவுக்கு தியாகி கக்கன் பெயரை சூட்ட வேண்டும், சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு ராஜிவ் காந்தி பெயரையும், எழும்பூர் ரயில் நிலையத்துக்கு எம்ஜிஆர் பெயரையும் சூட்ட வேண்டும்.
முதல்வர்: எஸ்.வி.சேகரின் முறையீடும் பரிசீலித்து நிறைவேற்றப்படும். இன்று அவரது தந்தையின் நினைவுதினம் என்றார். அவரது தந்தையின் ஆத்மா சாந்தியடைய என்று ஆசிர்வாதததையும் சமர்ப்பி்க்கிறேன்.
வேல்துரை (காங்கிரஸ்): எனது தொகுதியில் ஒரு மாணவியும், சத்துணவு உதவியாளரும் மரணமடைந்ததையடுத்து அவர்களது குடும்பத்துக்கு உதவி நிதி கேட்டு ஓராண்டாகியும் நிதி கிடைக்கவில்லை.
முதல்வர்: ஏன் இந்தத் தாமதம் என்று கண்டறிந்து, அதற்குக் காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுத்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிவுத் தொகை உடனடியாக வழங்கப்படும் என்றார்.