துவரம் பருப்பு விலை உயர்வு ஏன்?
சென்னை: உற்பத்தி குறைவால் தான் துவரம் பருப்பின் விலை அதிகரித்துள்ளதாக உணவுத்துறை அமைச்சர் வேலு கூறினார்.
இது குறித்த சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்துக்கு அவர் சட்டசபையில் பதிலளிக்கையில்,
நாடு முழுவதும் மழை குறைந்துள்ளதால் துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு போன்ற பருப்பு வகைகளின் உற்பத்தியும் வெகுவாக குறைந்துவிட்டது. அதனால்தான் துவரம் பருப்பின் விலை உயர்ந்துள்ளது.
இந்தியா முழுவதும் 32.3 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு உற்பத்தியாகிறது. ஆனால் 34 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு தேவைப்படுகிறது. தமிழகத்துக்கு மட்டும் 7.86 லட்சம் மெட்ரிக் டன் துவரம் பருப்பு தேவைப்படுகிறது. ஆனால் அதில் 20 சதவீதம் மட்டுமே தமிழகத்தில் உற்பத்தியாகிறது.
இதனால் துவரம் பருப்பு தேவைக்கு மற்ற மாநிலங்களையே நம்ப வேண்டியுள்ளது.
மகாராஷ்டிரம், ஆந்திரம், குஜராத் போன்ற மாநிலங்கள் தமிழகத்தைப் பின்பற்றி ரேஷனில் துவரம் பருப்பு விற்பனை செய்து வருகின்றன. அதற்காக இந்த மாநிலங்கள் மொத்தமாக துவரம் பருப்பை கொள்முதல் செய்து வருகின்றன. துவரம் பருப்பின் திடீர் விலை உயர்வுக்கு இதுவும் காரணமாகும்.
டிசம்பரில் பர்மாவில் இருந்து துவரம் பருப்பு வரத் தொடங்கும். அதன் பிறகு விலை குறையும். பருப்பு விலையைக் கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.
அரிசி, பருப்பு போன்ற அத்தியாவசியப் பொருள்களுக்கு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பிரதமருக்கும், உணவுத்துறை அமைச்சர் சரத் பவாருக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதினார். அதை ஏற்று அரிசி, கோதுமை, பருப்பு போன்ற உணவுப் பொருள்களுக்கு ஆன்-லைன் வர்த்தகத்தில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்துள்ளது என்றார் வேலு.