மாணவர் கொலை-பி.இ. மாணவர் முன்ஜாமீன் ரத்து
சென்னை: என்ஜீனியரிங் கல்லூரியில் நடந்த மோதலில் காயமடைந்து, கோமாவில் இருந்து பின்னர் மரணமடைந்த மாணவர் வழக்கில் பி.இ. மாணவருக்கு அளிக்கப்பட்ட முன்ஜாமீனை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
மேலும் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்கவும் அது உத்தரவிட்டுள்ளது.
சென்னை அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பார்த்திபன், ராஜ்குமார் ஆகியோர் படித்து வந்தனர். மாணவர்களிடையே ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி ராஜ்குமார் தாக்கப்பட்டார். படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் மாணவர் பார்த்திபன் உயர்நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி மாதம் 30-ந் தேதி முன்ஜாமீன் பெற்றார்.
இந்த நிலையில் கோமாவில் இருந்த ராஜ்குமார் ஜுன் 26-ந் தேதி மரணம் அடைந்தார். இதைத்தொடர்ந்து கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக போலீசார் மாற்றினார்கள்.
இதையடுத்து பார்த்திபனுக்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யவேண்டும் என்று போலீசார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை நீதிபதி ஆர்.ரகுபதி விசாரணை செய்து, பார்த்திபனுக்கு வழங்கிய முன்ஜாமீனை ரத்து செய்து நேற்று தீர்ப்பு வழங்கினார். மேலும் இந்த கொலை வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரிக்க வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராஜ்குமார் காயம் அடைந்த விவரத்தை போலீசார் முன்ஜாமீன் மனு விசாரணையின்போது சரியாக தெரிவிக்கவில்லை. தாக்குதல் நடந்த சம்பவத்தை போலீசார் முதலில் வழக்குப்பதிவு செய்யவில்லை. காயம் அடைந்தவரின் மாமா புகார் கொடுத்த பிறகுதான் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மாணவர் தலையில் லேசான காயம் என்றும், அவர் சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றுவிட்டார் என்றும் தெரிவித்ததால்தான், பார்த்திபனுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது.
ஆனால், காயத்தின் கடுமையை போலீசார் கூறவில்லை. ராஜ்குமார் கோமாவில் தொடர்ந்து இருந்துள்ளார். இந்த உண்மையெல்லாம் போலீசார் தெரிவிக்காதது துரதிர்ஷ்டவசமானது.
மேலும் இந்த சம்பவம் கல்லூரி வளாகத்தில், அதுவும் வகுப்பறையில் நடந்துள்ளது. பல உண்மைகளை மறைத்ததை ஏற்க முடியாது. எனவே கொலை வழக்காக மாற்றப்பட்டிருப்பதால் விசாரணைக்கு நிறைய தேவைப்படும்.
ஆகவே, மாணவர் பார்த்திபனை போலீஸ் காவலில் வைத்து விசாரித்தால்தான் விவரங்கள் வெளிவரும். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பலர் கைது செய்யப்படாதது துரதிர்ஷ்டவசமானது.
போலீசார் தவறான அணுகுமுறையை கையாண்டியிருப்பதால் இந்த கொலை வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்படுகிறது. பார்த்திபனுக்கு ஏற்கனவே வழங்கிய முன்ஜாமீன் ரத்து செய்யப்படுகிறது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்தார்.