இடைத்தேர்தல்- 5 தொகுதிகளிலும் பாஜக போட்டி
சென்னை: இளையான்குடி, கம்பம், ஸ்ரீவைகுண்டம், பர்கூர், தொண்டாமுத்தூர் ஆகிய 5 தொகுதிகளுக்கும் நடக்கும் இடைத் தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது.
இது குறித்த ஆலோசனைக் கூட்டம் இன்று பாஜக தலைமையகத்தில் நடந்தது. அதில், கட்சியின் மாநிலத் தலைவர் இல.கணேசன் மற்றும் பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, சுகுமாறன் நம்பியார் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அதில், 5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
இது குறித்து இல. கணேசன் நிருபர்களிடம் பேசுகையில்,
5 தொகுதிகளிலும் பாஜக போட்டியிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. நாளை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
தொகுதி தேர்தல் பொறுப்பாளர்களாக பொன். ராதாகிருஷ்ணன் (கம்பம்), எச். ராஜா (இளையாங்குடி), சரவண பெருமாள் (ஸ்ரீவைகுண்டம்), ரமேஷ் (பர்கூர்), செல்வக்குமார் (தொண்டாமுத்தூர்) ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார்.
புதிய தமிழகமும் புறக்கணிப்பு?
இதற்கிடையே இடைத் தேர்தலை அதிமுக வழியில் புதிய தமிழகம் கட்சி புறக்கணிக்கிறது.
இது குறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கை..
நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் ஜனநாயகம் குழி தோண்டு புதைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மின்னணு எந்திரம் மூலம் ஆளும் கட்சி முறைகேடுகள் செய்தும்,
திட்டமிட்டு லட்சக்கணக்கான வாக்காளர்களை நீக்கியது.
மேலும் வாக்களார்களை பணம் கொடுத்து விலை வாங்கும் வேலைகளும் நடைபெற்றது. இந்த முறைகேடுகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் செய்த போதிலும்
எவ்வித நடவடிக்கையும் இல்லை.
இந்த நிலையில் தான் 5 சட்ட சபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலிலேயே பெரும் மோசடி நடந்துள்ள நிலையில் இடைத்தேர்தல் நியாயமாக நடைபெற வாய்ப்பில்லை எனக் கூறி பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
இது தமிழக மக்களுக்கு நலன் தரக்கூடியதாக இருக்காது என்றாலும் அ.தி.மு.க.வின். முடிவு சரியானது என்று கருதுகிறோம். இதைப் பின்பற்றி எங்கள் கட்சியின் முடிவை வரும் 24 -ம் தேதி அறிவிப்போம் என்று கூறியுள்ளார்.