போதையில் எஸ்.ஐ-போலீசார் ரகளை: சஸ்பெண்ட்
சென்னை: மதுரை திருமங்கலத்தைச் சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டரும் போலீஸ்காரரும் போதையில் சென்னை கோயம்பேடு ஹோட்டலிலும் காவல் நிலையத்திலும் பெரும் ரகளையில் ஈடுபட்டனர். இதையடுத்து இந்த இருவரும், இவர்களுடன் இருந்த இன்னொரு போலீஸ்காரரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திருமங்கலம் போலீஸ் நிலையத்தில் சப்- இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருபவர் ராஜமாணிக்கம் (57). இதே காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார் தங்கம், பவளக்கண்ணன்.
இந்த மூவரும் ஆந்திர மாநிலம் நெல்லூருக்கு வழக்கு விசாரணைக்காக சென்றனர். இது தொடர்பாக ஒருவரை விசாரணைக்காக அழைத்துக் கொண்டு மதுரை செல்ல சென்னை கோயம்பேடு பஸ் நிலையம் வந்தனர்.
அருகில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மூவரும் மூக்குமுட்ட குடித்தனர். போதை தலைக்கேறிய நிலையில் கோயம்பேடு போலீஸ் நிலையம் அருகே உள்ள ஹோட்டலில் பிரியாணி சாப்பிட்டுள்ளனர்.
பிரியாணியும் மப்பும் கலந்து சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கத்தை என்னவோ செய்யவே திடீரென அவர் ரகளை செய்ய ஆரம்பித்தார். துணைக்கு போலீஸ்காரர் தங்கமும் சேர்ந்து கொண்டு ஹோட்டல் ஊழியர்களைத் தாக்கியதுடன் மேஜை, நாற்காலிகளையும் உடைத்து எறிந்தனர்.
இன்னொரு போலீஸ்காரரான பவளக்கண்ணன் அவர்களை தடுத்துப் பார்த்தும் முடியவில்லை.
இதையடுத்து ஹோட்டல் ஊழியர்கள் கோயம்பேடு போலீஸ் நிலையத்துக்கு நேரில் சென்று முறையிட்டனர். இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் தலைமையில் வந்த போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், தங்கம் ஆகியோரைப் பிடித்தனர்.
அப்போது அவர்களையும் இந்த இருவர் தாக்கினர். இதில் கோயம்பேடு சப்- இன்ஸ்பெக்டர் சிவக்குமாருக்கு பலத்த அடி விழுந்தது. ஏட்டு கிருஷ்ணமூர்த்தியின் கண்ணாடி உடைந்தது.
மேலும் காவலர்கள் ஏட்டுகள் ரகு, பாஸ்கரன், விஜயகுமார் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டது.
இதையடுத்து போதை போலீசார் இருவரையும் ஆட்டோவில் ஏற்றி போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது ஆட்டோ டிரைவரையும் இந்த இரு போதை போலீசாரும் தாக்கினார்.
கடும் முயற்சிக்குப் பின் சப்- இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம், போலீஸ்காரர்கள் தங்கம், பவளக்கண்ணன் மூவரும் கைது செய்யப்பட்டனர். 3 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இது குறித்து உடனடியாக மதுரை போலீஸ் டி.ஐ.ஜி. பாலசுப்பிரமணியத்துக்கு தகவல் போகவே மூவரையும் உடனடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளார்.