ராஜஸ்தானில் மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் குஜ்ஜார்கள்
ஜெய்ப்பூர்: இட ஒதுக்கீடு பிரச்சினையை மீண்டும் குஜ்ஜார் சமூகத்தினர் கையில் எடுக்கின்றனர். இதை வைத்து மீண்டும் பெரிய அளவில் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.
பழங்குடியினராக தாங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும். தங்களுக்கு பழங்குடியினர் சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டுச் சலுகைகள் வேண்டும் என்று நீண்ட காலமாக குஜ்ஜார் இனத்தவர் கோரி வருகின்றனர்.
ராஜஸ்தானில் கடந்த பாஜக ஆட்சியின்போது குஜ்ஜார்கள் மிகப் பெரிய போராட்டத்தை நடத்தி ராஜஸ்தானையே ஸ்தம்பிக்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால், ராஜஸ்தானில் பாஜக தனது ஆட்சியையே இழந்தது கடந்த சட்டசபைத் தேர்தலில்.
கடந்த ஆண்டு நடந்த போராட்டத்தின்போது பாஜக அரசு இவர்களுக்கு சிறப்புப் பிரிவின் கீழ் ஐந்து சதவீத இட ஒதுக்கீட்டுத் திட்டத்தை அறிவித்தது. இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால் அதுதொடர்பான சட்ட மசோதா ராஜஸ்தான் ஆளுநரிடம் இன்னும் கையெழுத்துக்காக காத்திருக்கிறது.
இதையடுத்து குஜ்ஜார்கள் அமைப்பின் தலைவர் பைன்ஸ்லா தலைமையில் மீண்டும் ஒரு பெரும் போராட்டத்தில் குதிக்க குஜ்ஜார்கள் தயாராகி விட்டனர். இன்று அதுகுறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.
பைன்ஸ்லா கடந்த லோக்சபா தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் என்பது நினைவிருக்கலாம்.
தற்போதைய காங்கிரஸ் அரசு இட ஒதுக்கீட்டு மசோதாவில் ஆளுநர் கையெழுத்திடாமல் இருப்பதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாக பைன்ஸ்லா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த பாஜக ஆட்சியில் சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அது கையெழுத்திடப்படாமல் உள்ளது. இதுகுறித்து அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எதுவும் செய்யாமல் உள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
முதலில் முற்றுகைப் போராட்டத்தை நடத்த பைன்ஸ்லா திட்டமிட்டுள்ளார். இதனால் குஜ்ஜார்கள் அதிகம் உள்ள பகுதிகளில் கூடுதல் படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர்.