மும்பை இரட்டை குண்டுவெடிப்பு வழக்கில் நாளை தீர்ப்பு
மும்பை: மும்பையில் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கேட்வே ஆப் இந்தியா மற்றும் ஜாவேரி பஜார் பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவ வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்படுகிறது.
2003ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் தேதி இந்த இரு இடங்களிலும் குண்டுவெடிப்புகள் நடந்தன. இதில் 53 பேர் கொல்லப்பட்டனர்.
லஷ்கர் இ தொய்பா இந்த குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கார்களில் குண்டுகளை வைத்து இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.
2002ம் ஆண்டு குஜராத்தில் நடந்த மதக் கலவரத்தில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கும் வகையில் இந்த சம்பவத்தை நடத்தியது லஷ்கர் அமைப்பு.
இந்த பரபரப்பு குண்டுவெடிப்பு வழக்கில், முகம்மது ஹனீப் சயீத், அவரது மனைவி பஹீமிதா, அஷ்ரத் சபீக் அன்சாரி, ஜாகித் யூசுப் பத்னி, ரிஸ்வான் லட்டூவாலா, ஷேக் பேட்டரிவாலா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய நபரான நசீர் என்பவர் 2003ம் ஆண்டு செப்டம்பர் மாதம் மாதுங்கா பகுதியில் நடந்த என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது நான்கு வழக்குகள் தொடரப்பட்டன. 101 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பொடா சட்டத்தின் கீழ் இந்த வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்கை பொடா நீதிபதி புரானிக் விசாரித்து வந்தார். இந்த பரபரப்பு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கப்படவுள்ளது. குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் கைது செய்யப்பட்டுள்ள அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கைத் தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.