செலவைக் குறைக்க இலங்கையில் தூதரகத்தை மூடுகிறது ஸ்வீடன்
கொழும்பு: செலவுக் குறைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக தனது இலங்கை தூதரகத்தை மூடவுள்ளதாம் ஸ்வீடன்.
அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதியன்று இலங்கையில் உள்ள ஸ்வீடன் தூதரகம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவுத்துறையின் பட்ஜெட் சுருங்கி விட்டதால் இந்த நடவடிக்கை அவசியம் என ஸ்வீடன் வெளியுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதவிர நியூயார்க், கான்டென், லாஸ் ஏஞ்சலெஸ், கலினின்கிராட் ஆகிய நகரங்களில் உள்ள துணைத் தூதரகங்களையும் மூடவுள்ளதாம் ஸ்வீடன்.
ஆனால் இலங்கையில் தனது தூதரகத்தை மூடும் ஸ்வீடன் நடவடிக்கைக்கு வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் மாதம் ஸ்வீடன் வெளியுறவு அமைச்சர் கார்ல் பில்ட்டுக்கு விசா தர இலங்கை அரசு மறுத்தது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே பிரச்சினை வெடித்தது.
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த முகாம்களுக்கு அந்த சமயத்தில் இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மிலிபான்ட், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர் பெர்னார்ட் கொச்னார் ஆகியோர் சென்றனர். அவர்களுடன் பில்ட்டும் செல்வதாக இருந்தது. ஆனால் அதை இலங்கை அரசு அனுமதிக்காமல் பில்ட்டுக்கு விசா தராமல் அவமதித்து விட்டது. இதை ஸ்வீடன் கடுமையாக கண்டித்திருந்தது.
இந்தப் பின்னணியில்தான் தற்போது தனது தூதரகத்தை மூட முடிவு செய்துள்ளது ஸ்வீடன் என்பது குறிப்பிடத்தக்கது.