நெட் பாங்கிங்-கடலூரில் ரூ. 6 லட்சம் மோசடி
கடலூர்: ஒரு வாடிக்கையாளரின் அனுமதி இல்லாமல் அவரது வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 6 லட்சம் பணத்தை, நெட் பாங்கிங் முறை மூலம் இன்னொரு நிறுவனத்திற்கு மாற்றி பெரும் மோசடி நடந்துள்ளது.
கடலூர் எஸ்.என்.சாவடி காவேரி நகரைச் சோர்ந்தவர் முருகன் (49). நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்டராக உள்ளார். அவர் கடலூர் - சிதம்பரம் சாலையில் உள்ள தனியார் வங்கியில் கணக்கு வைத்து இருக்கிறார்.
கடந்த 25-6-2009 அன்று அவர் அந்த வங்கியில் ரூ.20,37,236-க்கான காசோலை வழங்கி, அவரது கணக்கில் வரவு வைத்தார். அதன் பிறகு அவரது தொழில் சார்ந்த வாடிக்கையாளர்கள் சிலருக்கு, காசோலைகளை வழங்கினார்.
ஆனால் ரூ.6 லட்சத்துக்கான காசோலைகள், முருகனின் வங்கிக் கணக்கில் பணம் இல்லை என்று திரும்பிவிட்டன. இதையடுத்து அவர்கள் முருகனிடம் முறையிட்டனர்.
ஆனால் அவ்வளவு பணம் வைத்திருந்தோமே என்று குழப்பமடைந்த முருகன், வங்கியில் வந்து விசாரித்தார்.
அப்போது, வங்கி மேலாளர், முருகனின் கணக்கில் இருந்து, ரூ. 6 லட்சம் கோவையில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு இன்டர்நெட் மூலம் விடுவிக்கப்பட்டு இருப்பதாகத் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தார் முருகன். நான் கோவையில் யாருக்குமே செக் கொடுக்கவில்லையே என்று அவர் கூறியுள்ளார்.
இதையடுத்து வங்கி உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக, வங்கி மேலாளர் உறுதி அளித்தார்.
ஆனால் ஒரு மாதம் ஆகியும் அந்த வங்கி நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இதையடுத்து திருப்பாப்புலியூர் காவல் நிலையத்தில் முருகன் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸார் வங்கி மேலாளர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நெட் பாங்கிங் மூலம் இந்த பண மோசடி நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட தனியார் வங்கி வாடிக்கையாளருக்கு பாங்கிங் வசதி இருந்தால், அவரது பாஸ்வேர்டை திருடி இந்த மோசடி நடந்து இருக்கலாம்.
வங்கியின் தலைமை அலுவலகம் தான் பாஸ்வேர்டு வழங்கும்.
ஒரு வேளை, வாடிக்கையாளருக்கு நெட் பாங்கிங் வசதி இல்லை எனில், சம்பந்தப்பட்ட இரு வங்கிக் கிளை மேலாளர்கள் மற்றும் பணம் விடுவிக்கப்பட்ட நிறுவனத்தினர் சேர்ந்து இந்த மோசடியைச் செய்திருக்கலாம்.
வழக்கமாக இதுபோன்ற நவீன மோசடிகள் எல்லாம் வெளிநாடுகளில் சாதாரணமாக நடைபெறும். ஆனால் இந்தியாவில் இது மிகவும் அரிது. இந்த நிலையில் தமிழகத்தில் இப்படி ஒரு மோசடி போலீஸ் கவனத்திற்கு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.