தேமுதிக வேட்பாளர்கள் இன்று மனு தாக்கல்
வேட்புமனு தாக்கல் நாளை மறுநாளுடன் முடிவடையும் நிலையில் தனது கட்சியின் வேட்பாளர்களை விஜய்காந்த் நேற்று அறிவித்தார்.
அதன்படி கம்பம் தொகுதியில் தேமுதிக மாவட்ட துணைச் செயலாளர் அருண்குமார், ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் மாநில வர்த்தக அணி துணைச் செயலாளர் செளந்திரபாண்டியன், இளையான்குடி தொகுதியில் ராமநாதபுரம் மாவட்ட தேமுதிக பொருளாளர் அழகு.பாலகிருஷ்ணன் போட்டியிடுகின்றனர்.
தொண்டாமுத்தூர் தொகுதியில் செயற்குழு உறுப்பினர் தங்கவேலு, பர்கூர் தொகுதியில் கிருஷ்ணகிரி மாவட்ட தேமுதிக செயலாளர் சந்திரன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
இதில் ஸ்ரீவைகுண்டம் வேட்பாளர் எம்.சௌந்தரபாண்டியன் சென்னையில் இருப்பதால் நாளை மனு தாக்கல் செய்கிறார். அவரைத் தவிர மற்ற 4 பேரும் இன்று மனு தாக்கல் செய்துவிட்டனர்.
சிபிஎம் வேட்பாளர்கள் அறிவி்ப்பு:
இதற்கிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தான் போட்டியிடும் தொண்டாமுத்தூர், கம்பம் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
வேட்பாளர்களை அக்கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன் அறிவித்தார்.
வேட்பாளர்கள் விவரம்...
கம்பம் - தேனி மாவட்டச் செயலாளர் கே.ராஜப்பன்.
தொண்டாமுத்தூர் - பெருமாள்.
வேட்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்பு
கம்பம் ராஜப்பன் (64), 1968ல் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்தவர். தற்போது தேனி மாவட்டச் செயலாளர். மாநிலக்குழு உறுப்பினர், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர், மாநிலச் செயலாளர் என பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். இவரது மனைவி அமுதா. இவர்களுக்கு பார்த்திபன், நவநீதகண்ணன் ஆகிய மகன்கள் உள்ளனர்.
தொண்டாமுத்தூர் பொது தொகுதி என்றாலும், தலித் இனத்தை சேர்ந்த வி.பெருமாள் (49) வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர், கோவை மாவட்ட சிஐடியு என்ஜினியரிங் சங்க பொதுச்செயலாளர்.
கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர். கோவை மாவட்டத்தில் பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்றவர். மனைவி புனிதவதி. பாரதிசிந்தன், விவேகானந்த பாரதி என்ற 2 மகன்கள் உள்ளனர்