குழப்பத்தில் ஜெ-மீண்டும் அதிமுக மா.செக்கள் கூட்டம்
தான் ஓய்வெடுத்து வரும் கொடநாடு எஸ்டேட்டுக்கு கடந்த வாரம் கட்சி நிர்வாகிகளை அழைத்து ஆலோசனை நடத்திய ஜெயலலிதா சட்டசபை இடைத் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவித்தார். அவரது இந்த முடிவை மதிமுக, பாமக ஆகியவை வரவேற்றன.
ஆனால் சிபிஎம் இந்த முடிவை சுத்தமாக ஏற்கவில்லை. இந்தக் கட்சியுடன் தேசிய அளவில் இணைந்தே இருக்கும் சிபிஐயும், வேறு வழியில்லாமல் சிபிஎம் முடிவுக்குக் கட்டுப்பட நேரிட்டது. இரு கட்சிகளும் தற்போது ஆளுக்கு 2 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.
இந் நிலையில் 25ம் தேதி அதிமுக மாவட்ட செயலாளர்களை வரவழைத்த ஜெயலலிதா அவர்களுடன் ஆலோனை நடத்தினார். இக்கூட்டத்தில் அதிமுகவினர் யாரும் வாக்களிக்கக் கூடாது என்று அவர் உத்தரவிட்டார்.
இந் நிலையில் தற்போது மீண்டும் நாளை மாவட்டச் செயலாளர்களை கொடநாடு எஸ்டேட்டுக்கு அழைத்துள்ளார் ஜெயலலிதா. இது 2வது கட்ட ஆலோசனைக் கூட்டம் எனக் கூறப்படுகிறது.
நாளை காலை 11 மணிக்கு கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், இடைத்தேர்தல் குறித்தும், கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும் மீண்டும் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என்று கட்சி நிர்வாகிகள் கூறுகின்றனர்.
கடந்த 10 நாட்களில் ஜெயலலிதா கூட்டியுள்ள 3வது முக்கியமான கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இதுவாகும். இதனால் இடைத் தேர்தல் விஷயத்தில் அதிமுக பெரும் குழப்பத்தில் இருப்பதாகத் தெரிகிறது.