சோனியா சஸ்பென்ஸ்-தவித்த பிரதமர் மன்மோகன்!
சமீபத்தில் எகிப்து பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் இணைந்து வெளிட்ட கூட்டறிக்கையில், "அனைத்து விஷயங்களையும் உள்ளடக்கிய ஒருங்கிணைந்த பேச்சுவார்த்தையைத் தொடங்க பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கையை நிபந்தனை போல பயன்படுத்தக் கூடாது'' என்று கூறப்பட்டிருந்தது. இதன்மூலம் பாகிஸ்தானிடம் இந்தியா சரணடைந்துவிட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்த கூட்டறிக்கை தொடர்பாக மன்மோகன் சிங் மீது காங்கிரஸ் தலைவர் சோனியா அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாயின. கடும் கோபத்தில் உள்ள சோனியா, பிரதமரையே மாற்றக் கூடும் என்று கூட கூறப்பட்டது.
இதை அமைச்சர்கள சிலர் மறுத்தாலும் காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக மறுக்காமல் இருந்து வந்தது. இதனால் சஸ்பென்ஸ் அதிகரித்தது.
இந் நிலையில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மற்றும் மூத்த காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டம் நேற்று முன் தினம் நடந்தது. இதையடுத்து பிரதமருக்கு காங்கிரஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது குறித்து அகில இந்திய காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜனார்த்தன் திவிவேதி கூறுகையில்,
எகிப்து பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்- பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஆகியோர் இணைந்து வெளிட்ட கூட்டறிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கமளிக்கவுள்ளார். அப்போது எதிர்க்கட்சிகளின் சந்தேகங்களுக்கும் அவர் உரிய பதிலை அளிப்பார். இந்தியாவின் நலனுக்கு எதிராக எந்த காரியத்தையும் செய்யவில்லை என்பதை மன்மோகன் சிங் நிரூபிப்பார் என்பதில் காங்கிரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றார்.
பிரதிபாவிடம் முறையிட்ட பாஜக கூட்டணி:
இந் நிலையில் சர்ச்சைக்குரிய இந்தியா-பாகிஸ்தான் கூட்டறிக்கை தொடர்பாக ஜனாதிதி பிரதிபா பாட்டீலிடம் பாஜக கூட்டணி இன்று முறையிடட்டது.
இந்தக் கூட்டணியைச் சேர்ந்த எம்பிக்கள் பாஜக தலைவர் அத்வானி தலைமையில் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு பேரணியாகச் சென்று ஜனாதிபதியிடம் இது குறித்து புகார் அறிக்கையைத் தந்தனர்.