ஜி-15 கூட்டமைப்பின் தலைவராகும் இலங்கை
கொழும்பு: இந்தியா உள்ளிட்ட 15 வளரும் நாடுகளை உள்ளடக்கிய ஜி 15 கூட்டமைப்பின் தலைவர் பதவியை ஏற்க இலங்கை சம்மதித்துள்ளது.
முதலீடு, வர்த்தகம், தொழில்நுட்பம் ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்படுவதற்காக உருவாக்கப்பட்ட கூட்டமைப்பாகும் இது.
இந்த அமைப்பின் தலைவர் பதவி தற்போது இலங்கை வசம் வந்துள்ளது.
கடந்த 1989ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்த ஜி 15 அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் நிறுவன உறுப்பினர்களில் ஒன்றாக இலங்கை உள்ளது.
இந்த அமைப்பில் இந்தியா, அல்ஜீரியா, அர்ஜென்டினா, பிரேசில், சிலி, எகிப்து, இந்தோனேசியா, ஈரான், ஜமைக்கா, கென்யா, மலேசியா, மெக்சிகோ, நைஜீரியா, பெரு, செனகல், வெனிசூலா, ஜிம்பாப்வே ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன.
முகாம் தமிழர் நிலை-யு.எஸ். கவலை:
இதற்கிடையே இடம் பெயர்ந்தோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள லட்சக்கணக்கான தமிழர்களின் நிலை குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது.
அவர்களுக்கு உதவ நிதியுதவி செய்வதாகவும் அது அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் அகதிகள் துறை துணை அமைச்சர் எரிக் ஸ்வார்ட்ஸ் இதுகுறித்து கூறுகையில், முகாம்களில் வசிக்கும் 2 லட்சத்து 80 ஆயிரம் அப்பாவி மக்களுக்குத் தேவையான சீரமைப்பு மற்றும் மறுவாழ்வு நடவடிக்கைகளுக்காக அமெரிக்கா 8 மில்லியன் டாலர் நிதியுதவியை அளிக்கும்.
முகாம்களில் உள்ள அப்பாவி மக்களின் நிலை இன்னும் மேம்படவில்லை. அவர்களது நிலை கவலை அளிப்பதாக உள்ளது. அவர்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியுள்ளது.
பெருமளவிலான மக்கள் முகாம்களை விட்டு வெளியே வர முடியாத அளவுக்கு முடக்கப்பட்டுள்ளனர்.
முகாம்களுக்குள் செல்ல சர்வதேச மனிதாபிமானக் குழுக்களுக்கு அனுமதி தரப்படாமல் உள்ளது கவலை தருகிறது. போரினால் ஏற்பட்ட பாதிப்புகளை இந்த மக்களைப் பார்த்து புரிந்து கொள்ள முடிகிறது.
விரைவில் இவர்கள் நிலைமை மேம்படும், சொந்த ஊர்களில் இவர்கள் குடியமர்த்தப்படுவார்கள் என இலங்கை அதிபர் ராஜபக்சேவும், பிற அதிகாரிகளும் உறுதியளித்துள்ளனர்.
முகாம்கள் தற்காலிகமானதாக மட்டுமே இருக்க வேண்டும். இதுவே நிரந்தர தீர்வாகி விடக் கூடாது என்று இலங்கை அரசு நான் வலியுறுத்தியுள்ளேன்.
இங்கு வசிக்கும் அனைத்து மக்களும் அவர்களது சொந்த ஊர்களுக்குக்கு மீண்டும் அனுப்பப்பட வேண்டும். அவர்களை சொந்த ஊர்களில் குடியமர்த்துவதை இலங்கை அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றார் ஸ்வார்ட்ஸ்.
முன்னதாக மாணிக் பார்ம் அகதிகள் முகாமை ஸ்வார்ட்ஸ் பார்வையிட்டார். அதிபர் ராஜபக்சே, வெளியுறவு அமைச்சர் ரோஹித பொகல்லகாமா ஆகியோரையும் அவர் சந்தித்துப் பேசினார்.