திருச்சியில் வேட்டை-9 திருடர்கள், 8 ரவுடிகள் கைது
திருச்சி: திருச்சியில், திருட்டு, கொள்ளை போன்ற பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு போலீஸாருக்கு தலைவலியாக இருந்து வந்த ரவுடிகள், குற்றவாளிகள் போலீஸ் கமிஷனர் கருணாசாகர் எடுத்த அதிரடி நடவடிக்கையால் கைது செய்யப்பட்டனர்.
திருச்சியில், திருட்டு, கொள்ளை போன்ற குற்றச் செயல்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதில் ஈடுபடுபவர்களைப் பிடிக்க போலீஸார் கடுமையாக முயன்றும் யாரும் சிக்கவில்லை.
இந்த நிலையில், பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளிகள், ரவுடிகளை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து, திருச்சி போலீஸ் கமிஷனர் கருணாசாகர் செய்தியாளர்களிடம் கூறுகையில், திருச்சி மாநகரில் கன்னம் வைத்து திருடுவது, மொபைல் ஃபோன் திருட்டு, டூவீலர் திருட்டு, செயின்பறிப்பு சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்ய நான்கு தனிப்படை அமைக்கப்பட்டது.
ஸ்ரீரங்கம், கருமண்டபம், எடமலைப்பட்டிபுதூர், கே.கே.நகர், விமானநிலையம் பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து பொருள்களை கொள்ளையடித்து வந்த அரியமங்கலத்தை சேர்ந்த ஹக்கீம்(34), மயிலாடுதுறை அசைன்(34), துவாக்குடி ஷேக் சுல்தான் (25) ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 47 பவுன் நகை மீட்கப்பட்டுள்ளது.
இதேபோன்று, காந்திமார்க்கெட், பாலக்கரை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் செல்ஃபோன் திருட்டில் ஈடுபட்ட வரகனேரி பிச்சை நகரை சேர்ந்த ரமேஷ் (41), சமயபுரம் முனுசாமி (43), நத்தர்ஷா பள்ளிவாசல் முத்து (39) ஆகியோர் கைது செய்யப்பட்டு 18 மொபைல் ஃபோன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
உறையூர், கண்டோன்மென்ட், கோட்டை போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் டூவீலர் திருடிய துவாக்குடி திருவள்ளுவர் நகரை சேர்ந்த குமார் (29) கைது செய்யப்பட்டு 15 டூவீலர்கள் கைப்பற்றப்பட்டன.
ஸ்ரீரங்கம் போலீஸ் எல்லையில் இரண்டு செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட பெரம்பலூர் பாரதிதாசன் நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார் (19), செக்கடி தெருவை சேர்ந்த வினோத் மைக்கேல் ராஜ் இருவரும் கைது செய்யப்பட்டு எட்டு பவுன் நகை கைப்பற்றப்பட்டன.
திருச்சியில் கடந்த ஒரு மாதத்தில் பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்ட பத்து பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சுந்தரபாண்டி, மதன்குமார் உள்ளிட்ட எட்டு ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சியில் திருட்டு சம்பவம் முழுமையாக நடக்காமல் தடுக்க குடியிருப்புவாசிகள், போலீஸ் மற்றும் போலீஸ் நண்பர்கள் இணைந்து இரவு ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.