இடைத் தேர்தல் - விஜயகாந்த் 12 நாள் புயல் பிரசாரம்
சென்னை: சட்டசபை இடைத் தேர்தலுக்காக 12 நாள் பிரசாரத்தைத் திட்டமிட்டுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.
இதுவரை கிடைத்திராத அரிய வாய்ப்பு தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. திமுகவுடன் நேரடியாக மோதும் சந்தர்ப்பம்தான் அது. மேலும் அதிமுகவும் களத்தில் இல்லை. இதனால் பெருவாரியான வாக்குகளை ஈர்க்கும் பெரும் சந்தர்ப்பம் தேமுதிகவுக்குக் கிடைத்துள்ளது. சற்று முயன்றால் வெற்றிக் கனியை பறிக்கும் வாய்ப்பும் கூடவே உள்ளது.
இதனால் இடைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் விரிவான பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார் விஜயகாந்த். இதற்காக 12 நாட்கள் அவர் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்கவுள்ளார்.
இதுதொடர்பாக தேமுதிக தலைமைக் கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை...
இளையாங்குடியில் தொடக்கம்...
இளையாங்குடியில் ஆகஸ்ட்5 மற்றும் 6 ஆகிய இரு நாட்கள் கட்சியின் வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்கிறார்.
ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் போட்டியிடும் கட்சி வேட்பாளர் எம்.சவுந்தரபாண்டியனுக்கு ஆதரவாக 7,8 தேதிகளில் ஓட்டு வேட்டையாடுகிறார்.
கம்பம் தொகுதியில் 9, 10ம் தேதிகளில் தேமுதிக வேட்பாளர் ஆர்.அருண்குமாரை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
பர்கூர், தொண்டாமுத்தூரில் 6 நாள் பிரசாரம்...
பர்கூர் தொகுதி வேட்பாளர் வி.சந்திரனை ஆதரித்து 11, 12,13 ஆகிய 3 நாட்கள் வாக்கு சேகரிக்கிறார்.
கடைசியாக தொண்டாமுத்தூர் தொகுதியில் கே.தங்கவேலுவை ஆதரித்து 14,15,16 ஆகிய 3 நாட்கள் இடைவிடாது பிரச்சாரம் செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொண்டாமுத்தூரில் காங்கிரஸ் போட்டியிடுகிறது. பர்கூரில் திமுக போட்டியிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.