செங்கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு ஸ்வைன்?
செங்கோட்டை: செங்கோட்டையை சேர்ந்த ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு பன்றி காய்ச்சல் நோய் தாக்கியிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
செங்கோட்டை மேலூர் கீழப்பள்ளி வாசலை சேர்ந்தவர் முகமது இப்ராகிம். இவரது வீட்டிற்கு கடந்த 26ம் தேதி இவருடைய மனைவியின் தம்பி துபாய் நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வி்மான நிலையம் வழியாக செங்கோட்டைக்கு நேரடியாக வந்துள்ளார்.
அன்று அவரது வீட்டில் பெரிய விருந்து ஒன்றும் நடந்துள்ளது. அன்று மாலை முகமது இப்ராகீம் மூத்த மகன் முகமது யூசுப் என்பவருக்கு திடீரென்று உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர்.
மேலும் அவரது இவரது இளைய மகன் முகமது இத்ரீஸ்(11) மற்றும் முகமது இப்ராகீம் (55) ஆகியோரையும் காய்ச்சல் தாக்கவே இவர்கள் அனைவரும் உடனடியாக நெல்லை மாவட்ட மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் முகமது இத்ரீஸ் சுயநினைவு இழந்துள்ளதாகவும், கண் திறக்க முடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இவர்களில் முகமது இத்ரீஸ்க்கு பன்றி காய்ச்சல் தாக்கியிருக்கலாம் என்று மருத்துவர்களால் சந்தேகிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனது ரத்தம் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
கடந்த 89ம் ஆண்டு செங்கோட்டை மேலூர் கீழபள்ளி வாசல் தெருவில் முகமது இப்ராகீம் வீட்டிற்கு எதிர் வீட்டில் இருந்த 2 பேர் காலரா நோயால் தாக்கப்பட்டு இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
நகராட்சி ஆணையர் அசோக் குமார் செங்கோட்டை நகராட்சி பகுதியில் முழுமையாக நோய் தடுப்பு குறித்து ஆலோசனை நடத்தி முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.