ராஜினாமா நிராகரிப்பால் பணிக்குத் திரும்பினார் உமர் அப்துல்லா
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோரா முதல்வர் உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை நிராகரித்து விட்டதால் அப்துல்லா இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார்.
2006ம் ஆண்டு நடந்த மிகப் பெரிய செக்ஸ் ஊழல் தொடர்பான சர்ச்சையில் உமர் அப்துல்லாவை இழுத்து விட்டு பெரும் புகார் கூறியது மக்கள் ஜனநாயகக் கட்சி.
இதனால் ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் உமர். கட்சியினர் தடுத்தும் கேளாமல் அவர் ஆளுநர் வோராவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்தார்.
இருப்பினும் ஆளுநர் வோரா நேற்று உமர் அப்துல்லாவின் ராஜினாமாவை ஏற்க மறுத்து விட்டார்.
இதைத் தொடர்ந்து இன்று மீண்டும் பணிக்குத் திரும்பினார் உமர் அப்துல்லா. இன்று காலை தலைமைச் செயலகம் வந்த அவரை ஊழியர்கள் வரிசையில் நின்று வரவேற்றனர்.
அவர்களுடன் உரையாடிய பின்னர் கோப்புகளைப் பார்க்க ஆரம்பித்தார் உமர். மேலும் தனது அமைச்சரவை சகாக்களுடன் வழக்கமான கூட்டத்தையும் அவர் மேற்கொண்டார். பின்னர் கேபினட் கூட்டமும் நடந்தது.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எனது பெயர் சம்பந்தப்பட்டதாக இருந்ததால் மட்டுமல்லாமல், இந்த மாநிலத்தின் அரசியல், அரசியல்வாதிகள் ஆகியோரின் பெயரும் களங்கப்படுத்தப்படுவது போல இருந்ததால்தான் நான் ராஜினாமா முடிவை எடுக்க நேரிட்டது என்றார்.