பெரம்பலூரில் சட்டவிரோத ஜெயலலிதா வரவேற்பு வளைவு - இடிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு

கடந்த 2005ம் ஆண்டு பெரம்பலூரில், அதிமுக பொதுச் செயலாளர் (அப்போது முதல்வராக இருந்தார்) ஜெயலலிதாவின் 57வது பிறந்த நாளையொட்டி வரவேற்பு வளைவு அமைக்கப்பட்டது.
துறையூர் - பெரம்பலூர் சாலை, துரைமங்கலம் சாலை ஆகிய இடங்களில் இந்த வரவேற்பு அலங்கார வளைவுகள் அமைக்கப்பட்டன.
இந்த வளைவுகளால் போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதில் அலங்கார வளைவுகளை இடிக்க உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
ஆனால் அரசு உத்தரவுடன் அமைக்கப்பட்டதால் இதை இடிக்க உத்தரவிட முடியாது என்று கூறி மனு தள்ளுபடிசெய்யப்பட்டது.
இதை எதிர்த்து மனுதாரர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த அலங்கார வளைவுகள் சட்டவிரோதமானது. எனவே இதை அகற்ற வேண்டும். மனுதாரருக்கு ஆர்ச் அமைத்தவர்கள் ரூ. 50, 000 வழக்கு செலவாக தர வேண்டும் என உத்தரவிட்டது.
இதையடுத்து எந்த நேரத்திலும் ஜெயலலிதாவுக்காக அமைக்கப்பட்ட வளைவுகள் இடிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.












Click it and Unblock the Notifications