மன நெருக்கடி விலகி இப்போதுதான் நிம்மதியாகியிருக்கிறேன் - அனிதா ராதாகிருஷ்ணன்
சென்னை: கடந்த ஒன்றரை வருடங்களாக கடும் மன நெருக்கடியில் இருந்தேன். இப்போதுதான் நி்ம்மதியாக இருக்கிறது என்று கூறியுள்ளார் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு திமுகவில் இணைந்துள்ள அனிதா ராதாகிருஷ்ணன்.
நேற்று மாலை சென்னைக்கு வந்து முதல்வர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் வீட்டில் சந்தித்தார் அனிதா ராதாகிருஷ்ணன். முதல்வரிடம் தான் திமுகவில் இணைய விருப்பப்படுவதாகவும் தெரிவித்தார். அதை வரவேற்பதாக முதல்வர் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி, அனிதாவின் சகோதரர்கள் சண்முக ஆனந்தன், சிவா ஆனந்தன், தமிழ்நாடு நாடார் இளைஞர் பேரவை தலைவர் டி.ராஜகுமார், அ.தி.மு.க.வை சேர்ந்த ராஜா திலகன், விவேகானந்தன், மாவட்ட அ.தி.மு.க. வக்கீல் பிரிவு இணை செயலாளர் வக்கீல் வெங்கடேஷ்குமார், தொழில் அதிபர் அருள் ஜோதி, மார்த்தாண்டன், ஆர்.ராதாகிருஷ்ணன், ஜி.சிவன்ராஜ், கே.இளைய பெருமாள், சம்பத், எஸ்.ரவி, சி.டி.பால சங்கர், ஆர்.கே.நகர் பகுதி துணை செயலாளர் ஏ.டி.மணி ஆகியோர் உடன் இருந்தனர்.
பின்னர் வெளியே வந்த அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதல்வர் கருணாநிதியை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். நாளை (அதாவது இன்று) எனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்கிறேன். அதன் பின்னர் முறைப்படி தி.மு.க.வில் சேருகிறேன்.
அதிமுகவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே கடும் மனநெருக்கடியில் இருந்தேன். இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது.
தொகுதி மற்றும் மாவட்ட மக்களுக்கு பணியாற்ற திமுகவில் இணைகிறேன். திமுக ஆட்சியில் தான் மக்கள் பணி சிறப்பாக நடக்கிறது என்றார் அனிதா.
மீண்டும் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிடுவீர்களா என்ற கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று தெரிவித்தார் அனிதா.
எம்.எல்.ஏ பதவி ராஜினாமா
இதற்கிடையே, இன்று சட்டசபை சபாநாயகர் ஆவுடையப்பனை சந்தித்த அனிதா ராதாகிருஷ்ணன் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து கடிதம் கொடுத்தார்.
அவரது ராஜினாமாவை சபாநாயகர் ஆவுடையப்பன் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து திருச்செந்தூர் தொகுதி காலியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications