திருடர்கள் அட்டகாசம் - ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விடப்பட்ட பெண்
முசாபர்நகர்: உ.பி. மாநிலம் முசாபர் நகரில், ரயிலில் புகுந்த கொள்ளையர்கள், ஒரு பெண் வைத்திருந்த பொருட்களை கொள்ளையடித்த பின்னர் அவரை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டுள்ளனர்.
டெல்லி - அம்பாலா மார்க்கத்தில் சென்ற ஒரு ரயிலில், பிரியங்கா என்ற பெண் தனது கணவர் அமீத் குமாருடன் நேற்று பயணித்தார்.
அப்போது ரயில், கட்டோரி ரயில் நிலையத்தை அடைந்ததும் சிலர் ரயிலில் ஏறினார்கள். ரயில் கிளம்பியதும், அந்த நபர்கள், பிரியங்கா அணிந்திருந்த நகை உள்ளிட்ட பொருட்களை தருமாறு மிரட்டினர்.
ஆனால் தர முடியாது என்று கூறி பிரியங்காவும், அவரது கணவரும் போராடினர். அப்போது ஆத்திரமடைந்த திருடர்கள், பிரியங்காவை ஓடும் ரயிலிலிருந்து தள்ளி விட்டு விட்டனர்.
அதிர்ச்சி அடைந்த அமீத் குமார் உடனே அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார். இதையடுத்து திருடர்கள் ஓடி விட்டனர்.
படுகாயமடைந்த நிலையில் விழுந்து கிடந்த பிரியங்கா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.