நீண்ட காலத்திற்குப் பிறகு பேசிய சந்திரிகா - பெண்களுக்கு 'கோட்டா' கேட்கிறார்!
கொழும்பு: அதிபர் பதவியிலிருந்து விலகிய பின்னர் தீவிர அரசியலிருந்து ஒதுங்கியே இருக்கும் முன்னாள் இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா நீண்ட மெளனத்தைக் கலைத்து முதல் முறையாக பேசியுள்ளார்.
பண்டார நாயகே குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா இலங்கை அதிபராக இருந்தவர். அதிபர் பதவியிலிருந்து அவர் விலகிய பின்னர் மகிந்தா ராஜபக்சே அதிபர் பதவியில் அமர்ந்தார்.
அதன் பின்னர் சந்திரிகா பொது வாழ்க்கையில், பங்கெடுக்காமல் அமைதியாக ஒதுங்கி விட்டார். தீவிர அரசியலிலும் அவர் ஈடுபடவில்லை. அவரது குடும்பத்தினர் உருவாக்கிய இலங்கை சுதந்திரா கட்சி இன்று பண்டார நாயகே குடும்பத்தை விட்டு தொலை தூரத்திற்குப் போய் விட்டது.
இந்த நிலையில் ராஜபக்சேவின் அதிருப்தியாளர்கள் மீண்டும் சந்திரிகாவை தீவிர அரசியலுக்கு இழுத்து வர முயற்சித்து வருகின்றனர். முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரா அதில் முன்னணியில் இருக்கிறார்.
சந்திரிகாவும் தீவிர அரசியலுக்கு மீண்டும் வர சம்மதித்து விட்டதாக தெரிகிறது. அதை உறுதிப்படுத்துவது போல நீண்ட காலத்திற்குப் பின்னர் அவர் நேற்று பொதுப் பிரச்சினை தொடர்பாக பேசியுள்ளார்.
கொழும்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், அரசியல் மற்றும் பிற துறைகளில் பெண்களின் பங்கு என்பது குறித்து நேற்று அவர் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட வேண்டும். இயற்கையிலேயே பெண்களிடம்தான் சிறந்த பராமரிப்பு குணமும், நல்ல பேச்சுத் திறமையும் உள்ளது.
குடும்பமாகட்டும், அரசியலாகட்டும், ஆட்சியாகட்டும், பெண்களால்தான் திறம்பட செயல்பட முடியும்.
இலங்கை நாடாளுமன்றத்தில் தற்போது 13 சதவீத பெண்களே உறுப்பினர்களாக உள்ளனர். எனது ஆட்சிக்காலத்தில் 15 முதல் 20 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருந்தனர். ஆனால் இது போதாது என்றார் சந்திரிகா.
மீண்டும் தீவிர அரசியல் பிரவேசத்திற்கு சந்திரிகா தயாராகி விட்டதையே அவரது பேச்சு காட்டுவதாக உள்ளதாக அரசியல் நிபுணர்கள் கருதுகின்றனர்.
மீண்டும் தீவிர அரசியலுக்கு சந்திரிகா வந்தாலும் கூட அந்நாட்டு அரசியல் சட்டப்படி சந்திரிகாவால் மீண்டும் அதிபர் பதவிக்கு வர முடியாது. அதேசமயம், எம்.பியாகி, பிரதமர் பதவிக்கு அவரால் வர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.