மறு பரிசீலனைக்குப் பின்னர் பர்கூர் தேமுதிக வேட்பாளரின் மனு ஏற்பு
தேமுதிக சார்பில் பர்கூரில் சந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் வேட்பு மனு பரிசீலனையின்போது சந்திரன் மற்றும் தேமுதிகவின் மாற்று வேட்பாளர் ஆகியோரின் மனுக்கள் சரிவர பூர்த்தி செய்யப்படவிலலை என்று கூறி மனுக்களை தேர்தல் அதிகாரி நிராகரித்து விட்டார்.
இதையடுத்து நேற்று தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தாவை, தேமுதிக அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் நேரில் சந்தித்து புகார் மனு அளித்தார்.
அப்போது தேமுதிக வேட்பாளர்களின் மனுக்களில் இருந்த சாதாரண பிழைகளை தாக்கல் செய்தபோதே தேர்தல் அதிகாரி சுட்டிக் காட்டாமல் விட்டு விட்டு வேண்டும் என்றே பின்னர் நிராகரித்து விட்டதாக குறை கூறியிருந்தார்.
மேலும், இதுபோன்ற சாதாரண பிழைகளை நிவர்த்தி செய்து மனுக்களை பரிசீலனை செய்த சம்பவங்கள் முன்பு நிறைய நடந்ததுண்டு என்றும் சுட்டிக் காட்டி மனுவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று கோரியிருந்தார்.
இதையடுத்து சந்திரனின் வேட்பு மனுவை மீண்டும் பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதையடுத்து இன்று சந்திரனின் மனு மறு பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
மறு பரிசீலனைக்குப் பின்னர் சந்திரனின் மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அவர் சுயேச்சை வேட்பாளராகவே போட்டியிட அனுமதிக்கப்பட்டுள்ளார். எனவே அவருக்கு தேமுதிகவின் முரசு சின்னம் கிடைக்க வாய்ப்பில்லை. ஒருவேளை யாரும் முரசு சின்னத்தைக் கோராவிட்டால் சந்திரனுக்குக் கிடைக்கலாம்.
இல்லாவிட்டால், குலுக்கல் மூலம் என்ன சின்னம் வருகிறதோ, அதில்தான் அவர் போட்டியிட முடியும்.
சுயேச்சையின் மனு ஏற்பு..
இதற்கிடையே, வேட்பு மனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்ட ஸ்ரீவைகுண்டம் தொகுதி சுயேச்சையின் வேட்பு மனு இன்று மறு பரிசீலனைக்குப் பின்னர் ஏற்கப்பட்டது.
ராஜா என்பவர் சுயேச்சையாகப் போட்டியிட ஸ்ரீவைகுண்டத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுக்கள் பரிசீலனையின்போது அது நிராகரிக்கப்பட்டது.
இதையடுத்து மறு பரிசீலனை செய்யக் கோரி அவர் முறையிட்டார். இதையடுத்து இன்று மறு பரிசீலனை செய்து மனு ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அத்தொகுதியில் போட்டியிடுவோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது.