எம்.எல்.ஏக்களுக்கு சம்பள உயர்வு, வீட்டு மனை - எதிர்த்து வழக்கு தொடர அனுமதி
சென்னை: எம்.எல்.ஏக்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வு, இலவச வீட்டு மனை ஆகியவற்றை எதிர்த்து வழக்கு தொடர சமூக சேவகர் டிராபிக் ராமசாமிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
நடந்து முடிந்த சட்டசபைக் கூட்டத் தொடரின் இறுதியில், எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. பின்னர் காங்கிரஸ் உறுப்பினர் ஞானசேகரனின் கோரிக்கையை ஏற்று எம்.எல்.ஏக்களுக்கு வீட்டு மனை வழங்கவும் முதல்வர் ஒப்புக் கொண்டார்.
இந்த நிலையில் நேற்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே, நீதிபதி முருகேசன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு சமூக சேவகர் டிராபிக் ராமசாமி ஆஜரானார்.
அவர்களிடம், 5 ஆண்டு காலம் பதவியில் இருக்கும் எம்.எல்.ஏ.க்களுக்கு கடந்த 3 ஆண்டுகளில் ரூ.34 ஆயிரம் அளவுக்கு ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இந்த அளவுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு சம்பளம் உயர்த்தப்படவில்லை.
சட்டமன்ற உறுப்பினர்களின் பணி என்பது சமூக சேவைக்கு நிகரானது. எனவே அவர்களுக்கு இது போன்ற ஊதியமோ வீட்டு மனைகளோ வழங்கத் தேவை இல்லை. எனவே நான் இதை எதிர்த்து வழக்கு தொடர்ரவுள்ளேன். அதற்கு அனுமதி வேண்டும் என்றார்.
அதற்கு தலைமை நீதிபதி கோகலே கூறுகையில், நீங்கள் மனுத் தாக்கல் செய்யுங்கள், நாங்கள் விசாரிக்கிறோம் என்று அனுமதி அளித்தார்.