குஷ்பு மேட்டூருக்கு வந்தால் பிரச்சினை ஏற்படும் - வக்கீல்
மேட்டூர்: விசாரணைக்காக நடிகை குஷ்பு மேட்டூர் கோர்ட்டுக்கு வந்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே அவர் நேரில் ஆஜராகத் தேவையில்லை என்று மேட்டூர் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்ப் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு தெரிவித்த கருத்து தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அவர் மீது பல்வேறு கோர்ட்டுகளில் வழக்கு தொடரப்பட்டது.
அதேபோல மேட்டூர் நீதிமன்றத்தில் முருகன் என்ற வழக்கறிஞரும் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு விசாரணைக்காக கோர்ட்டில் நேரில் ஆஜராக குஷ்பு வந்தபோது அவர் மீது அழுகிய முட்டை, தக்காளிகளை வீசிப் போராட்டம் நடத்தப்பட்டது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக 41 பேர் மீது மேட்டூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கு விசாரணைக்காக குஷ்புவை நேரில் அழைப்பதா, வேண்டாமா என்ற பிரச்சினை எழுந்தது.
இதுதொடர்பாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பில் ஆஜராகும் வழக்கறிஞர் சதாசிவம், மீண்டும் குஷ்புவை கோர்ட்டுக்கு அழைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படலாம் என்பதால் அவரை நேரில் அழைக்க வேண்டியதில்லை என்று தெரிவித்தார்.
இதுகுறித்து நேற்று நீதிபதி நந்தினிதேவி விசாரித்தார். பின்னர் செப்டம்பர் 22ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.