சுயநலத்தை விட்டு விட்டு மெஹபூபா போல ஜெ. செயல்பட வேண்டும் - விஜயகாந்த்
ஐந்து தொகுதி இடைத் தேர்தல் பிரசாரத்தைத் தொடங்கியுள்லார் விஜயகாந்த். இதற்காக இன்று அவர் கோவை வந்தார்.
விமான நிலையத்தில் தேமுதிகவினர் அவரை பிரமாண்டமாக வரவேற்று அழைத்துச் சென்றனர். பின்னர் சூலூர் அருகே உள்ள ராவுத்தர் தோட்டம் சென்ற விஜயகாந்த், தொண்டாமுத்தூர் தேர்தல் பிரசாரம் குறித்து மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் வேட்பாளர் தங்கவேலுவும் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் விஜயகாந்த். அப்போது அவர் கூறுகையில்,
மக்களை பாதிக்கும் விலை உயர்வு மற்றும் பல்வேறு பிரச்சினைகளை முன் வைத்து இடைத்தேர்தலில் பிரசாரம் செய்வோம்.
இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணித்து உள்ளது. இது அக்கட்சியின் முடிவு. அதேசமயம் ஜெயலலிதா சுயநலமாக எடுத்த முடியும்.
எதிர்க்கட்சியான அவர்கள் மக்களுக்காக போராடி இருக்க வேண்டும். ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவியான மஹபூபா முப்தி செயல்படுவதைப் போல ஜெயலலிதா செயல்பட வேண்டும்.
தே.மு.தி.க.வின் வளர்ச்சியைப் பார்த்து அரசியல்வாதிகள் கலங்கிப் போயுள்ளனர். நாங்கள் மக்களுக்கு நல்லது செய்யவே பாடுபட்டு வருகிறோம். ஆளுங்கட்சியை விரும்பாத மக்கள் நல்ல கட்சிக்கு ஓட்டு போடுங்கள்.
திருமங்கலம் தேர்தலில் நடந்தது போல இந்த இடைத்தேர்தலிலும் எல்லாமும் நடக்கத்தான் செய்யும். இந்த இடைத்தேர்தல் தி.மு.க.வால் வரவழைக்கப்பட்ட தேர்தல்.
இந்தத் தேர்தலை சந்திக்க தேமுதிக தயாராகி விட்டது. ஐந்து தொகுதிகளிலும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்யவுள்ளேன் என்றார் அவர்.