புதுச்சேரி காங். ஆட்சிக்கு கண்ணன் ஆதரவு - திமுக தயவு தேவையில்லை!
புதுச்சேரி: புதுச்சேரி காங்கிரஸ் அரசுக்கு கண்ணன் தலைமையிலான புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது. இதனால் திமுகவின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட ஆட்சியில் நீடிக்க முடியும் என்ற நிலையை காங்கிரஸ் அடைந்துள்ளது.
நிபந்தனையற்ற ஆதரவு தருவதாக கூறி புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் தலைவர் கண்ணன், கடிதம் கொடுத்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 10 எம்எல்ஏக்களுடன் உள்ளது. ஆட்சி நடத்த 16 பேரின் ஆதரவு தேவை. தற்போது 7 உறுப்பினர்களைக் கொண்ட திமுக ஆதரவு தருவதால், காங்கிரஸ் ஆட்சி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்க முன்வந்திருப்பதால் அக்கட்சியின் 3 எம்.எல்.ஏக்கள் ஆதரவு கிடைத்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமியை புதுச்சேரி முன்னேற்ற காங்கிரஸ் ஆதரித்தது. இப்போது காங்கிரஸ் அரசுக்கு ஆதரவு தர முன்வ்நதுள்ளது.
இதன் மூலம் தனது கட்சியின் 10 எம்.எல்.ஏக்கள் போக, கண்ணன் கட்சியின் 3, சுயேச்சைகள் 3 பேரின் ஆதரவு இருப்பதால் காங்கிரஸ் கட்சிக்கு தேவையான பெரும்பான்மை பலம் இதிலேயே கிடைத்து விட்டது.
இதனால் திமுகவின் ஆதரவு இல்லாவிட்டாலும் கூட காங்கிரஸ் ஆட்சி கவிழாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே பாமக, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அணி மாற்றம் காரணமாக ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டன. இதனால் திமுகவின் தயவை பெரிதும் நம்பியிருந்தது காங்கிரஸ். இந்த நிலையில் கண்ணன் கை கொடுத்திருப்பதால் நெருக்கடியிலிருந்து விலகியுள்ளது காங்கிரஸ்.
வரும் தேர்தலில் கண்ணன் கட்சியுடன் காங்கிரஸ் மேலும் நெருங்கும் எனத் தெரிகிறது. மேலும், லோக்சபா தேர்தல் ஆதரவு மற்றும் இப்போதையை ஆதரவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கண்ணனுக்கு ராஜ்யசபா எம்.பி. வாய்ப்பு தரப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications