ஆக.18 விமான ஸ்ட்ரைக்: வாபஸ் பெற்றன தனியார் நிறுவனங்கள்!
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கு மேல் இந்த அறிவிப்பை வெளியிட்டன விமான நிறுவனங்கள்.
ஆரம்பத்தில் கிங்பிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட 8 தனியார் விமான நிறுவனங்கள் ரூ.52000 நிதிச் சலுகை மற்றும் விமான எரிபொருள் - விமான நிலையக் கட்டண குறைப்பு கோரி இந்த ஸ்ட்ரைக் அறிவிப்பை வெளியிட்டன. அரசுத் தரப்பில் இதற்கு கடும் எச்சரிக்கையே பதிலாகக் கிடைத்தது.
கொஞ்சமும் நியாயமில்லாத இந்தக் கோரிக்கைகள் மக்களின் கோபத்தைக் கிளற, தனியார் விமானங்கள் அனைத்தையும் நாட்டுடைமையாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது. அனைத்து மாநில முதல்வர்களும் இந்த ஸ்ட்ரைக் முடிவை வன்மையாகக் கண்டித்தனர்.
மேலும், ஸ்ட்ரைக் நடத்த முயன்றால், விமானங்கள் பறிமுதல் செய்யப்படும், அதன் உரிமையாளர்கள் உள்ளிட்ட பலரும் கைது செய்யப்படுவார்கள் என்றும் விமான போக்குவரத்து இயக்ககம் எச்சரி்த்தது. கோடிக்கணக்கான ரூபாய் அபராதம் விதிக்கவும் அரசு தயாரானது.
இன்னொரு பக்கம், ஸ்ட்ரைக்கில் ஆரம்பத்தில் பங்கேற்பதாக அறிவித்த இன்டிகோ, அரசுத் தரப்புக்கு ஆதரவாக மாறியது. 'ஸ்ட்ரைக் என்பது இந்த சூழலில் வேண்டாத வேலை, பொதுமக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத அளவு செயல்படுவோம். அரசுக்கு ஒத்துழைப்போம்...,' என ஞாயிற்றுக் கிழமை காலை அறிவித்தது அந்த நிறுவனம்.
அடுத்த சில மணிநேரங்களில் மற்றொரு முக்கிய விமான நிறுவனமான ஸ்பைஸ்ஜெட்டும் ஸ்ட்ரைக் முடிவிலிருந்து பின்வாங்கியது. தங்களின் அனைத்து விமானங்களையும் முழு வீச்சில் ஆகஸ்ட் 18-ம் தேதி இயக்குவதாக அந்த நிறுவனம் அறிவிக்க, ஆடிப்போனது விஜய் மல்லையா - நரேஷ் கோயல் அணி.
மேலும், இந்திய விமான நிறுவன கூட்டமைப்பில் உறுப்பினராக இல்லாத எம்டிஎல்ஆர் போன்ற விமான நிறுவனங்கள் முழு அளவில் விமானங்களை இயக்க முன்வந்தன. தங்கள் தரப்பு மிகவும் பலவீனமடைந்துவிட்டதால், வேறு வழியின்றி, தங்கள் ஸ்ட்ரைக் அறிவிப்பை வாபஸ் பெறுவதாகவும், ஆகஸ்ட் 18-ம் தேதி அனைத்து விமான நிறுவனங்களும், முழு அளவில் விமானங்களை இயக்குவோம் என்றும் விமான நிறுவனக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.