திட்டமிட்டபடி வள்ளுவர் சிலை திறக்கப்படும்-எதியூரப்பா
பெங்களூர் தமிழ்ச்சங்கம் சார்பில் அல்சூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை 18 ஆண்டு கால இழுபறிக்குப் பின்னர் வருகிற 9ம் தேதி திறக்கப்படுகிறது.
இதற்காக முதல்வர் கருணாநிதி பெங்களூர் வந்துள்ளார். சிலை திறப்பு ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகின்றன.
அதேபோல சென்னையில் கன்னடக் கவிஞர் சர்வஞ்னரின் சிலை ஆகஸ்ட் 13ம் தேதி திறக்கப்படவுள்ளது. இதில் கர்நாடக முதல்வர் எதியூரப்பா பங்கேற்கிறார்.
இந்த நிலையில் ஒகேனக்கல், காவிரி பிரச்சினை தீரும் வரை திருவள்ளுவர் சிலையை திறக்கக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வருகின்றன.
மேலும், சிலை திறப்பு விழா அன்று பெங்களூரில் முழு அடைப்பு நடத்த போவதாகவும் கன்னட அமைப்புகள் அறிவித்து உள்ளன.
இதையடுத்து அனைத்துத் தரப்பினரையும் அழைத்துப் பேசி அமைதியான முறையில் சிலை திறப்பு விழாவை நடத்த முதல்வர் எதியூரப்பா திட்டமிட்டார். அதன்படி இன்று பெங்களூரில் கூட்டம் கூட்டப்பட்டது.
சட்டசபை அமைந்துள்ள விதானசவுதா மாநாட்டு அரங்கத்தில் முற்பகலில் கூட்டம் தொடங்கியது.
இதில் திருவள்ளுவர் மற்றும் சர்வஞ்னரின் சிலைகள் திறப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில் காங்கிரஸ், பாஜக, மதசார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகள், பல்வேறு கன்னட அமைப்புகள், எழுத்தாளர்கள், கன்னட அறிஞர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் சிலைகள் திறப்புக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஆனால், சில கன்னட அமைப்புகள் மட்டும் கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்தன. பின்னர் அரசின் முடிவை எதிர்த்து விதான செளதா அருகே தர்ணா போராட்டம் நடத்தினர்.
கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய எதியூரப்பா, திருவள்ளுவர் மற்றும் சர்வஞ்னர் சிலைகள் திறப்புக்கு கூட்டத்தில் முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டது.
இரு மாநில சகோதரத்துவத்தை நிலை நாட்டும் வகையிலும், உறவுகளை வலுப்படுத்தும் வகையிலுமே இந்த சிலைகள் திறக்கப்படுகின்றன. இதன் மூலம் இரு மாநில உறவுகள் மேலும் வலுவடையும்.
திட்டமிட்டபடி இரு சிலைகளும் திறக்கப்படும். திறப்பு விழாக்கள் சிறப்பாக நடைபெறும் என்றார்.
முன்னதாக நேற்று எதியூரப்பா செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழக முதல்வரும், நானும் செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி திருவள்ளுவர் சிலை திறக்கப்படும். அதேபோல சென்னையில் சர்வக்ஞர் சிலையும் திறக்கப்படும். திருவள்ளுவர் சிலையை திறக்க எதிர்ப்பு தெரிவிப்பது சரியல்ல என்றார்.