என்னை காப்பாற்ற காங் தேவையில்லை-பூட்டா சிங்
டெல்லி: எனக்கு வந்த பிரச்சினையை நானே சமாளித்துக் கொள்வேன். எனக்கு காங்கிரஸ் கட்சியின் உதவியோ, ஆதரவோ தேவை இல்லை என்று கூறியுள்ளார் மகன் ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கிய வழக்கில் சிக்கியுள்ள முன்னாள் காங்கிரஸ் தலைவரும், தேசிய எஸ்.சி, எஸ்டி ஆணையத் தலைவருமான பூட்டா சிங்.
துப்புறவு காண்டிராக்டரிடமிருந்து ரூ. 1 கோடி லஞ்சம் வாங்கியதாக பூட்டா சிங்கின் மகன் சரப்ஜோத் சிங் கைது செய்யப்பட்டுள்ளார். பூட்டா சிங் சொல்லித்தான் லஞ்சம் வாங்கியதாகவும் அவர் சிபிஐயிடம் தெரிவித்துள்ளார். இதனால் பூட்டாவையும் விசாரிக்க சிபிஐ முயன்று வருகிறது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சி கண்டு கொள்ளாமல் இருந்து வருகிறது. பூட்டா சிங் காங்கிரஸ்காரர் அல்ல, அவர் அரசு சார்பு அமைப்பின் தலைவர் என்று கூறி கைகழுவி விட்டது.
இதுகுறித்து பூட்டா சிங் கூறுகையில், நான் தலித்துகளின் காவலனாகத்தான் என்றும் இருக்கிறேன். எனது வாழ்க்கை முழுவதும் தலித்துகளின் உயர்வுக்காகத்தான் பாடுபட்டுள்ளேன்.
எத்தனையோ ஏழை தலித்துகளின் வாழ்வில் நான் ஒளியேற்றி வைத்தவன். அப்படிப்பட்ட என்னை, ராஜினாமா செய்யச் சொன்னால், அதற்குப் பதில் உயிரை விட்டு விடத் தயாராக உள்ளேன்.
எனது பிரச்சினைக்கு காங்கிரஸ் கட்சியின் ஆதரவு தேவை இல்லை. அதை சமாளிக்க என்னால் முடியும் என்று கூறியுள்ளார் பூட்டா சிங்.