சயீத் விடுதலை: லோக்சபாவில் அமளி - ஒத்திவைப்பு
டெல்லி: லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத் விடுதலை செய்யப்பட மத்திய அரசின் கவனக்குறைவுதான் காரணம் என்று கூறி இன்று லோக்சபாவில் எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தன. இதனால் அவை ஒத்திவைக்கப்பட்டது.
போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட், சயீத் வழக்கை காலவரையினறி ஒத்தி வைத்து விட்டது. இதனால் சுதந்திர மனிதராக மாறியுள்ளார் சயீத்.
இது இன்று லோக்சபாவில் எதிரொலித்தது. பாஜக, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும், மத்திய அரசின் கவனக்குறைவால்தான் சயீத் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று குற்றம் சாட்டின
பூஜ்ய நேரத்தின்போது இந்தப் பிரச்சினையை முலாயம் சிங் யாதவ் எழுப்பினார். அவர்க கூறுகையில், நாம் பாகிஸ்தானை நம்பினோம். ஆனால் அந்த நாடு நம்மை ஏமாற்றி துரோகம் இழைத்து விட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மணி நேரம் விவாதம் நடத்தப்பட வேண்டும். அதேபோல இதுதொடர்பாக பிரதமர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
பாகிஸ்தானை முடக்க நமக்கு நல்ல சந்தர்ப்பம் இருந்தது. ஆனால் இந்தியா அந்த வாய்ப்பை தவற விட்டு விட்டது. இப்போது பாகிஸ்தான் தனக்கு வசதியாக நிலையை மாற்றி விட்டது என்றார்.
அவருக்கு ஆதரவு தெரிவித்து பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா பேசினார். அவர் கூறுகையில், சயீத்துக்கு மும்பை தாக்குதலில் உள்ள தொடர்பு குறித்த முழுமையான ஆதாரங்களை நாம் பாகிஸ்தானிடம் அளித்தோம். ஆனால் ஐஎஸ்ஐயுடன் அவருக்கு உள்ள தொடர்பால் இப்போது வெளியே வந்து விட்டார்.
மும்பை சம்பவத்தில் அவர்தான் முக்கிய குற்றவாளி. ஆனால் பாகிஸ்தான் அந்தக் காரணம், இந்தக் காரணம் என்று கூறி அவரை விடுவித்து விட்டது என்றார். அப்போது பாஜக உறுப்பினர்கள் அவமானம், அவமானம் என்று கூச்சலிட்டனர்.
அமளியில் ஈடுபட்ட உறுப்பினர்களை அமைதிப்படுத்த சபாநாயகர் மீரா குமார் முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. இந்த நிலையில், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்யவே, அவையை ஒத்திவைத்தார் சபாநாயகர்.












Click it and Unblock the Notifications