நியூயார்க்கில் சீனாவுக்கு எதிராக தமிழர்கள் போராட்டம்
நியூயார்க்: இலங்கையின் இனப்படுகொலைக்கு துணை போகும் சீனாவைக் கண்டித்தும், ஆயுதங்களை அள்ளிக் கொடுக்கும் அதன் செயலைக் கண்டித்தும், ஐ.நா.வில் உள்ள சீனத் தூதரக அலுவலகம் முன்பு தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணை போனதாக சீனா மற்றும் இந்தியா மீது ஈழத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்து வாழும் தமிழர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
இலங்கைப் பாதுகாப்புப் படைக்கு இரு நாடுகளும் ஆயுதம் மற்றும் பொருளுதவி செய்து வருவதை இவர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஐ.நா.வில் உள்ள சீனத் தூதரகத்திற்கு வெளியே இலங்கைத் தமிழர்கள் கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலங்கை அரசின் இன அழிப்பு மற்றும் இனப்படுகொலைக்கு சீனா துணை போகக் கூடாது என்று அப்போது முழக்கமிடப்பட்டது.
இலங்கையின் போர்க் குற்றங்களுக்கு சீனாவே உதவாதே என்றும் கோஷமிடப்பட்டது.
இனப்படுகொலைக்கு எதிரான தமிழர்கள் என்ற அமைப்பு இந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது.
மேலும், இலங்கையின் ராணுவ நடவடிக்கையை தடுக்க முயலாமல் மெளனம் காத்து ஆயிரக்கணக்கான அப்பாவிகள் கொல்லப்பட்டதற்கு காரணமாகி விட்டதாக இந்தியாவையும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவுக்கு இந்தியா ஈழத் தமிழர்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. அவர்களை கைவிட்டு விட்டது. தமிழர்களுக்கு நீதி கிடைக்க இந்தியா உதவ வேண்டும் என்று தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications