கருணாநிதி டிவியில் உளறுகிறார்-விஜய்காந்த்
இளையான்குடி: இலவச திட்டங்களுக்காக 74 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 12,000 ரூபாய் கடனுடன் பிறக்கிறது. இவர்களின் தவறான அணுகுமுறையால் அரசு கஜானா காலியாகி வருகிறது. அடுத்து ஆட்சிக்கு வரும் எங்களுக்கு(!!!!) இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும் என்று தேமுதிக தலைவர் விஜய்காந்த் கூறுகிறார்.
இளையான்குடி இடைத் தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் அழகு பாலகிருஷ்ணனை ஆதரித்து ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் அவர் பேசுகையில்,
சிறுவயதில் நெல் கொள்முதலுக்காக எனது அப்பாவுடன் இந்தப் பகுதிக்கு வந்துள்ளேன். அன்றிருந்த பசுமை இன்று இல்லை. இப் பகுதியே வறட்சியாகிவிட்டது.
உலகளவில் 'நான்' என்ற அகங்காரம் கொண்ட அரசியல்வாதிகள் பாதிப்பை சந்திந்து வருகின்றனர். கருணாநிதிக்கும் அதே நிலை ஏற்படும். நான் கூறும் குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க முடியாத கருணாநிதி நேரடியாக பதிலளிக்காமல் டிவியில் உளறுகிறார். எனக்கொரு சேனல் இருந்திருந்தால் அவரது உளறலுக்கு மறுநிமிடமே நானும் என் பதிலை தந்திருப்பேம்.
52 ஆண்டு பொது வாழ்க்கையிலும், ஐந்து முறை முதல்வராகவும் இருந்த கருணாநிதியால் தமிழகத்துக்கு என்ன பயன்?.
டிவி கொடுப்பதற்கு பதிலாக வீட்டுக்கு வீடு வேலை கொடுப்பேன் என்று சொல்ல முடியுமா?. பெண்களிடம் தட்டில் பணம் வைத்து சத்தியம் வாங்கி ஓட்டுகேட்டு வருகின்றனர். கேட்டால், 'திருமங்கலம் பார்முலா' என்கின்றனர். அப்படியென்றால் அவர்களின் சாதனை எடுபடவில்லை என்று தானே அர்த்தம்.
இலவச திட்டங்களுக்காக 74 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கி உள்ளனர். இதனால் தமிழகத்தில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையும் 12,000 ரூபாய் கடனுடன் பிறக்கிறது. இவர்களின் தவறான அணுகுமுறையால் அரசு கஜானா காலியாகி வருகிறது.
அடுத்து ஆட்சிக்கு வரும் எங்களுக்கு(!!!!) இது பெரிய தலைவலியை ஏற்படுத்தும்.
எம்.ஜி.ஆரின் விசுவாசிகள் திமுகவுக்கு ஓட்டுப்போடக் கூடாது. நல்ல கட்சிக்கு ஓட்டுப்போடுங்கள். ஏழைகள் ஏழைகளாகவே இருக்ககூடாது என்பதுதான் தேமுதிகவின் கொள்கை.
எதிர்க்கட்சியே இல்லாமல் போக வேண்டும் என்று நினைக்கிறார்கள். நிச்சயம் அது நடக்காது.
எம்.ஜி.ஆர். திண்டுக்கல் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்றது போல இளையான்குடி இடைத்தேர்தலில் இந்த விஜய்காந்துக்கு வெற்றியைத் தாருங்கள் என்றார் விஜய்காந்த்.
கம்பத்தில் தேமுதிகவுக்கு அமோக ஆதரவு:
கம்பம் கம்பம் தொகுதியில் பெண் வாக்காளர்கள் மத்தியில் தேமுதிகவுக்கு பெரும் ஆதரவு காணப்படுகிறது. அதேசமயம், திமுக வேட்பாளராக நிற்கும் ராமகிருஷ்ணன் மீது பெரும் அதிருப்தியும் காணப்படுகிறது.
அதிமுக களத்தில் இல்லாததால் இடைத் தேர்தல் விறுவிறுப்பு சுத்தமாக இல்லாமல் போய் விட்டது. அதேசமயம், இந்த கேப்பைப் பயன்படுத்தி விஸ்வரூபம் எடுத்து விட வேண்டும் என்ற வேகத்தில் தேமுதிகவினர் படு சுறுசுறுப்பாக பணியாற்றி வருகின்றனர்.
கம்பம் தொகுதியில் தேமுதிகவினர் படு வேகமாக தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கிராமங்கள்தோறும் முரசு சின்னம் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது.
திமுகவினருக்கு இணையாக அவர்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதால் அசைக்க முடியாத நம்பிக்கையில் இருந்தாலும் கூட திமுகவினர் மனதில் லேசான கிலியும் காணப்படுகிறது.
கம்பம் தொகுதியில் திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் அருண் குமார் களத்தில் நிற்கிறார். இவர் வேறு யாரும் அல்ல, ராமகிருஷ்ணனின் சகோதரர் முருகேசனின் மருமகன் ஆவார்.
கூடலூரைச் சேர்ந்தவர் அருண்குமார். தேமுதிக மாவட்ட துணைச் செயலாளராக இருக்கிறார். எதிர் முனையில் நிற்பவர் மாமா என்ற தயக்கம் இல்லாமல் படு விறுவிறுப்பாக வாக்கு சேகரித்து வருகிறார் அருண்குமார்.
கிராமப் புற பெண் வாக்காளர்கள் மத்தியில் தேமுதிகவுக்கு நல்ல மவுசு உள்ளது. திமுக, அதிமுக மீது அவர்கள் பெரும் வெறுப்படைந்துள்ளனர்.
குறிப்பாக ராமகிருஷ்ணன் மீது தொகுதி முழுவதும் அதிருப்தி அலை பரவலாக உள்ளது. கடந்த தேர்தலில் அவர் மதிமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். திமுக மீது இருந்த அதிருப்தியில்தான் அவரைத் தேர்ந்தெடுத்தோம். ஆனால் அவர் அதை நினைத்துப் பார்க்காமல், தனது சுய லாபத்திற்காக திமுகவில் போய்ச் சேர்ந்து விட்டார். அவரை நம்பி எப்படி ஓட்டுப் போட முடியும் என்று பெண்கள் கேட்கிறார்கள்.
இந்த நிலையில் வேட்பாளர் அருண்குமார் குறித்தும் சிலர் அதிருப்தி வெளியிடுகின்றனர். அவர் என்னதான் இருந்தாலும் திமுக வேட்பாளரின் தம்பி மருமகன். அப்படி இருக்கையில், எப்படி அருண்குமாரை மட்டும் நம்ப முடியும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications