சென்னை மேயர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு
சென்னை: சென்னை மாநகராட்சி மேயர் சுப்பிரமணியம் மீதும் மாவட்ட கலெக்டர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளார் பொது நல ஆர்வலர் டிராபிக் ராமசாமி.
சென்னை நகரில் பொது மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களுக்கு கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டது. மாநகராட்சி அனுமதி இல்லாமல் டிஜிட்டல் பேனர்கள் வைக்கக்கூடாது. இதை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந் நிலையில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியத்தின் மகன் பிறந்தநாளையொட்டி சென்னை நகரில் பல இடங்களிலும் டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் பொது நல ஆர்வலரான டிராபிக் ராமசாமி வழக்குத் தொடர்ந்தார்.
அதி்ல், இந்த டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டது நீதிமன்ற அவமதிப்பாகும். இதை அகற்றக் கோரி மாநகர மேயர், கலெக்டர் ஆகியோருக்கு புகார் அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் இவர்களை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதி எப்.எம். இப்ராஹிம் கலிபுல்லா, நீதிபதி ராஜேந்திரன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, வரும் 21ம் தேதிக்குள் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி சென்னை மாவட்ட கலெக்டர் சோபனா, மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியம், மாநகராட்சி கமிஷனர் ராஜேஷ் லக்கானி, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.