கோலாலம்பூரில் வைத்தே கேபியை கொல்ல திட்டமிட்ட இலங்கை!

பிரபாகரன் மறைவுக்குப் பின்னர் கேபியை தலைவராக அறிவித்தது விடுதலைப் புலிகள் இயக்கம். இது புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியிலும், விடுதலைப் புலிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களிடையே இரு வேறான கருத்துக்களை ஏற்படுத்தியது.
ஒரு தரப்பு, பிரபாகரன் இல்லாத நிலையில் அவரது விசுவாசியான, மிகவும் நெருக்கமான, ஆரம்ப கால உறுப்பினரான கேபி, புலிகள் இயக்கத்தின் தலைவராவதில் தவறில்லை என்று கருதியது.
அதேசமயம், இன்னொரு பிரிவினர், பிரபாகரன் இருந்த இடத்தில் கேபியை வைத்துப் பார்க்க விரும்பவில்லை.
இந்த பிளவு காரணமாக, புலிகள் இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தொடங்குவதில் சிக்கலும், குழப்பமும், தாமதமும் ஏற்பட்டது.
இருப்பினும் ஒரு வழியாக கேபியை தலைவராக ஏற்று, அவரது வழிகாட்டுதலின் கீழ் செயல்பட புலம் பெயர்ந்த தமிழர்கள் தயாரானார்கள். நாடு கடந்த தமிழ்ஈழ அரசை நிறுவவுவது தொடர்பான பணிகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த நிலையில்தான் கேபி எதிர்பாராதவிதமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
உண்மையில் கேபியை சுட்டுக் கொன்று விடும் திட்டத்துடன்தான் இலங்கை உளவுப் படையின் சிறப்புப் பிரிவினர் சென்றனராம்.
கோலாலம்பூரில் கேபி இருப்பதை நம்பகமான உளவுத் தகவல் மூலம் தெரிந்து கொண்ட இலங்கை உளவுப் படையின் சிறப்புப் படை தாய்லாந்து தலைநகர் பாங்காக் விரைந்தது.
ஒரு பிரிவு கோலாலம்பூர் விரைந்தது. அங்கு வைத்தோ அல்லது பாங்காக்கில் வைத்தோ கேபியை சுட்டுக் கொல்லும் திட்டத்துடன்தான் அவர்கள் வந்திருந்தனர். ஆனால் சூழ்நிலைகள் சரியாக இல்லாததால் அவரை சுட்டுக் கொல்லும் திட்டம் கைவிடப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த மூன்று அதிகாரிகள் ராய்ட்டர்ஸ் நிறுவனத்திற்கு தங்களது பெயர்களைத் தெரிவிக்கக் கூடாது என்ற நிபந்தனையுடன் இதை கூறியுள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில்,கேபியை இலங்கை கொண்டுவர வேண்டும் என்று நாங்கள் நினைக்கவில்லை. சுட்டுக் கொன்று விடும் நோக்கத்துடன்தான் உளவுப் பிரிவினர் சென்றனர்.
ஆனால் அவரைக் கொல்வதற்கு சூழ்நிலைகள் எம்மை அனுமதிக்கவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
இந்த திடீர் மாற்றத்துக்குக் காரணம், கேபியை வளைத்தபோது உள்ளூர் (மலேசியா அல்லது தாய்லாந்து) பாதுகாப்புப் படையினரும், உளவுப் பிரிவினரும் உடன் இருந்தனர். அவர்களை வைத்துக் கொண்டு சுட்டுக் கொல்வது சரியாக இருக்காது என்பதால்தான் கடைசி நேரத்தில் அந்தத் திட்டத்தை இலங்கை உளவுப் பிரிவினர் மாற்றிக் கொண்டு விட்டனராம்.
பிரபாகரன் வைத்திருந்த போனால் சிக்கினார்..
வன்னி, முள்ளிவாய்க்கால் பகுதியில் போர் முற்றி வந்த நிலையில் பிரபாகரனின் செல்போன் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் கேபியின் செல்போன் எண் இருந்ததை ராணுவம் கண்டுபிடித்ததது.
அந்த எண் மலேசியா மற்றும் தாய்லாந்திருந்து பயன்படுத்தப்பட்டு வருவதை கண்டுபிடித்த இலங்கை உளவுப் படையினர், அதை வைத்துத்தான் கேபியின் நடமாட்டத்தைக் கண்டுபிடித்ததாக கூறப்படுகிறது.
கேபியின் நடமாட்டம் உள்ளதாக சந்தேகப்பட்ட மலேசியா, தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு உளவுப் பிரிவினர் அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்களுக்கு இடப்பட்ட உத்தரவு, கேபி சிக்கினால் சுட்டுக் கொன்று விடுங்கள் என்று கூறப்பட்டிருந்ததாம்.
ஆனால் இவர்களின் ஊடுறுவலை மோப்பம் பிடித்தோ என்னவோ தனது செல்போன் எண்களை தொடர்ந்து மாற்றியபடி இருந்தார் கேபி. ஆனாலும் அவர் எப்படியோ சிக்கியுள்ளார்.
மாட்டி விடப்பட்டாரா?
கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக யார் கண்ணிலும் படாமல், மாயாவி போல நடமாடி வந்த கே.பி, அவரது உண்மையான உருவம் என்ன என்று கூட யாருக்கும், ஏன் இந்திய உளவுப் படையினருக்கே தெரியாமல் இருந்து வந்த நிலையில், 'ஜஸ்ட் லைக் தட்' கேபி சிக்கியிருப்பது பல்வேறு கேள்விகளைப் புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுப்பியுள்ளது.
நிச்சயம், கேபியைப் பிடிக்காத சிலர்தான் அவரது இருப்பிடத்தை கசிய விட்டு சிக்க வைத்திருப்பதாக பலத்த கருத்து எழுந்துள்ளது.
பிரபாகரனின் நிழல் போல இருந்தவர் கேபி. இத்தனை ஆண்டு காலமாக விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதுகெலும்பு போல செயல்பட்டு வந்தவர் கேபி. பிரபாகரனுக்கு மட்டுமே பதில் சொல்லக் கூடியவராக, அவருடன் மட்டுமே தொடர்பு வைத்திருக்கும் நபராக திகழ்ந்தவர் கேபி.
புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள், வெடிபொருட்கள், அதி நவீன படகுகள், டேங்குகள், கடைசியாக குட்டி விமானங்கள் என அனைத்தையும் வாங்கிக் கொடுத்தவர் கேபிதான்.
உலகில் எங்கு தரமான அதேசமயத்தில் குறைவான விலையில் ஆயுதங்கள் கிடைக்கும் என்பது கேபிக்கு அத்துப்படி. உலகில் உள்ள முக்கிய ஆயுத வியாபாரிகளுடன் கேபிக்கு நல்ல தொடர்பு இருந்தது. அவரால் முடியாதது என்று எதுவும் இல்லை என்று கூறும் அளவுக்கு மிக மிக சாமர்த்தியசாலியாக, திறமைசாலியாக, நிறைய தொடர்புகள் கொண்டவராக விளங்கியவர் கேபி.
பிரபாகரன் இல்லாவிட்டால் எப்படி புலிகள் இயக்கம் இல்லையோ, அதேபோல, கேபி இல்லாவிட்டால் பிரபாகரன் இந்த அளவுக்கு வந்திருக்க முடியாது என்று கூட கூறும் அளவுக்கு புலிகள் இயக்கத்திற்கு மிகப் பெரிய அளவில் உதவியாக இருந்தவர் கேபி.
கேபி பிடிபட்டிருப்பதன் மூலம் புலிகள் இயக்கத்தின் நிதி ஊற்றுக்கள் முற்றிலும் இலங்கையின் பிடியில் சிக்கியுள்ளதாக கருதப்படுகிறது. புலிகள் இயக்கத்தின் நிதி ஊற்றுக்கள் எங்கெங்கு உள்ளன. என்னென்ன வழியில் அவர்களுக்குப் பணம் வந்தது, வருகிறது, எங்கெல்லாம் அவை முதலீடு செய்யப்பட்டுள்ளன, எங்கெங்கு அவர்கள் ஆயுதங்கள் வாங்கினார்கள் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இப்போது கேபி கக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ரா-ஐபி-சிபிஐ விசாரிக்கலாம்...
இலங்கை கொண்டு வரப்பட்டு தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள கேபியை விசாரிக்க இந்தியாவின் சிபிஐ, ஐ.பி, மற்றும் ரா ஆகிய அமைப்புகளும் தயாராகி வருகின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கேபிக்கு நேரடியாகத் தொடர்பு இல்லாவிட்டாலும் கூட ஒற்றைக் கண் சிவராசன், தனு ஆகியோருக்கு தேவையான வெடிபொருட்கள், துப்பாக்கி, மனித வெடிகுண்டு ஜாக்கெட் உள்ளிட்டவற்றை கேபிதான் தருவித்துக் கொடுத்தார் என்ற சந்தேகம் உள்ளது.
இதனால் கேபியை விசாரிக்கவும், ராஜீவ் காந்தி கொலை சதித் திட்டம் குறித்த உண்மையான,விரிவான தகவல்களைப் பெறவும் கேபியை விசாரிக்க வேண்டியது அவசியமாகியுள்ளது.
மேலும் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த மிக மிக முக்கியப் புள்ளியாக, உயிருடன் உள்ள ஒரே நபராக இருப்பது கேபி மட்டுமே. எனவே அவரை விசாரித்தால் ராஜீவ் காந்தி கொலை தொடர்பாக பல முக்கியத் தகவல்கள் கிடைக்கலாம் என ரா மற்றும் சிபிஐ ஆகியவை கருதுகின்றன.
ராஜீவ் காந்தி படுகொலையைத் தீட்டியவர்கள் பிரபாகரனும், பொட்டு அம்மானும்தான் என்று முன்பு கருணா கூறியிருந்தார். இருப்பினும் கேபிக்கு இதுகுறித்துத் தெரியாமல் இருக்காது என்று நம்பப்படுகிறது. அவருக்கும் இந்த திட்டம் தெரிந்திருக்கலாம். எனவே அவரை விசாரித்தால் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என சிபிஐ மற்றும் ரா ஆகியவை கருதுகின்றன.
பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரை விசாரிக்கும் சாத்தியம் இல்லாமல் போய் விட்டதால், தற்போது கிடைத்துள்ள மிக மிக முக்கிய நபரான கேபியை விசாரிக்க சிபிஐ மற்றும் ரா ஆகியவை தீவிரமாக உள்ளன.
சொத்துக்களை முடக்க திட்டம்...
இந்த நிலையில் கேபி மூலம் திரட்டப்பட்டு, உலகெங்கும் பரவிக் கிடக்கும் கோடிக்கணக்கான புலிகள் இயக்க சொத்துக்களை பறிமுதல் செய்யவும், முடக்கவும் இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது.
உலக நாடுகளில் பரவி வாழும் ஈழத் தமிழர்களிடமிருந்து நிதி வசூல் செய்தது கேபிதான். இந்தப் பணத்தைக் கொண்டுதான் புலிகள் இயக்கத்திற்கு ஆயுதங்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வந்தன.
கேபி கலெக்ட் செய்து கொடுத்து வந்த பணம் மட்டும் பல நூறு கோடிகள் என்று கூறப்படுகிறது. இப்போதும் கூட இவர் வசம் பல நூறு கோடி பணம் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த தகவல்களை முழுமையாக கறக்க முயன்று வருகிறது இலங்கை அரசு. அவற்றைப் பெற்றவுடன் அந்த சொத்துக்களை முடக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் புலிகள் இயக்கத்தை நிரந்தரமாக செயல்பட விடாமல் முடக்கி விடலாம் என இலங்கை கருதுகிறது.












Click it and Unblock the Notifications