ஸ்வைன் பரவல் - தடுக்க மத்திய அரசு தீவிரம்- நிபுணர் குழு அமைக்கப்படுகிறது

டாக்டர்கள், நிபுணர்களைக் கொண்ட குழு ஒன்றை அமைக்குமாறு சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் உத்தரவிட்டுள்ளார். மேலும், பன்றிக் காய்ச்சல் குறித்த சரியான தகவல்கள் மக்களுக்குப் போய்ச் சேருவதை உறுதி செய்யுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைளை பிரதமர் அலுவலகம் தீவிரமாக கண்காணிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் பன்றிக் காய்ச்சல் மிக வேகமாக பரவி வருகிறது. அங்கு மட்டும் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் ஒரு உயிர்ப்பலி ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பன்றிக் காய்ச்சலின் தாக்கம் நாடு முழுவதும் அதிகரித்து வருவதை இப்போதுதான் உணர்ந்துள்ள மத்திய அரசு விழித்தெழுந்துள்ளது.
நேற்று பிரதமர் மன்மோகன் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் குலாம் நபி ஆசாத்துடன் ஆலோசனை நடத்தினார். அப்போது, பன்றிக் காய்ச்சல் குறித்து மக்களிடையே சரியான தகவல்களுடன் தீவிர விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு அவர் உத்தரவிட்டார்.
மேலும், இதுதொடர்பாக டாக்டர்கள், நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைக்குமாறும், சரியான தகவல்களுடன் மக்களுக்கு செய்திகளைக் கொண்டு செல்லுமாறும், மீடியாக்கள் மூலம் பெரிய அளவில் விளம்பரங்களை செய்யவும் சுகாதாரத் துறைக்கு அவர் உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று குலாம் நபி ஆசாத், அமைச்சரவைச் செயலாளர் சந்திரசேகர், சுகாதாரத் துறை செயலாளர் நரேஷ் தயாள் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார்.
நோயைக் கட்டுப்படுத்துவது எப்படி என்பது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டது. நோய்ப் பரவலைத் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து மாநில அரசுகளுக்கு குலாம் நபி ஆசாத் ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளார். அதில், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பன்றிக் காய்ச்சலைக் கண்டறியும், சிகிச்சை அளிக்கவும், தனி வார்டுகளையும், புற நோயாளிகள் பிரிவையும் தொடங்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications