யாழ்ப்பாணத்தில் ஒதுங்கிய 7 தமிழக மீனவர்கள் உடல்கள் அடையாளம் கண்டுபிடிப்பு- தகனம்
யாழ்ப்பாணம்: தமிழகத்தைச் சேர்ந்த ஏழு மீனவர்களின் உடல்கள் அழுகிய நிலையில் யாழ்ப்பாணம் கரையில் ஒதுங்கியது. அவர்களின் உறவினர்கள் உடல்களை அடையாளம் காட்டினர். இதையடுத்து நேற்று ஏழு உடல்களும் அங்கேயே தகனம் செய்யப்பட்டது.
கடந்த வாரம் இந்த ஏழு உடல்களும் யாழ் கரைப் பகுதியில் கரை ஒதுங்கின. அழுகிய நிலையில் இருந்த இந்த உடல்களை அடையாளம் காட்ட காணாமல் போன மீனவர்களின் உறவினர்கள் ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடியிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
அவர்களை இந்திய கடற்படையினர் அழைத்து வந்து இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து யாழ்ப்பாணம், எழுவைத் தீவுக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இறந்து போன ஏழு பேரின் உடல்களையும் உறவினர்கள் அடையாளம் காட்டினர்.
இறந்து போனவர்கள் ராதாகிருஷ்ணன், சேதுமாதவன், சரவணன், தேவச்சந்திரன், முனிராஜ், செந்தில்குமார், நாகநாதன் என்பது தெரிய வந்துள்ளது.
இறந்தவர்கள் வைத்திருந்த ஆவணங்கள் மற்றும் உடலில் இருந்த மச்சம் உள்ளிட்ட அடையாளங்களை வைத்து உடல்கள் அடையாளம் காணப்பட்டன. அப்போது கோர்ட் மாஜிஸ்திரேட் ஒருவர் உடன் இருந்தார்.
இதையடுத்து ஏழு பேரின் உடல்களையும் உறவினர்கள், யாழ்ப்பாணம், கொம்பையன் மயானத்திற்குக் கொண்டு சென்றனர். அங்கு ஏழு உடல்களும் ஒரே சிதையில் வைத்து தீமூட்டி தகனம் செய்யப்பட்டன.
இறுதிச் சடங்குகளுக்கான அனைத்து உதவிகளையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications