தமிழக கடலோர பாதுகாப்புக்கு 'புல்லட் புரூப்' ரோந்து படகு!
தூத்துக்குடி: தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க கடலோர பாதுகாப்பு படைக்கு குண்டு துளைக்காத அதி நவீன ரோந்து படகு வழங்கப்பட்டுள்ளதாக கடலோர பாதுகாப்பு குழு ஐஜி ராஜேஷ் தாஸ் தெரிவித்தார்.
அவர் நிருபர்களிடம் கூறுகையில்,
தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க புதிய நவீன ரோந்து படகு தூத்துக்குடி வந்துள்ளது. சுமார் 12 டன் எடை கொண்ட இந்த படகு ரூ.2.15 கோடி செலவில் கொல்கத்தாவில் வடிவமைக்கப்பட்டது.
இதுபோன்று மேலும் 23 ரோந்து படகுகள் வரவுள்ளன. இதில் தூத்துக்குடியில் 4 படகுகள் பயன்படுத்தப்படும்.
இதன் மூலம் கன்னியாகுமரி முதல் ராமேஸ்வரம் வரையிலான கடல் பகுதிகளை துல்லியமாக கண்காணிக்க முடியும். குண்டு துளைக்காத புல்லட் புரூப் கண்ணாடி வசதி கொண்ட இந்த படகு 50 கடல் மைல் வேகத்தில் செல்லும்.
மேலும், கடலோர பாதுகாப்பு வீரர்களுக்காக 'ஆபரேசன் பேரிகார்ட்" என்னும் பெயரில் பயிற்சி முகாம் நடத்தப்பட்டது. இதில் மத்திய அரசின் கடலோர பாதுகாப்பு படை, கப்பற்படை, தமிழக கடலோர பாதுகாப்பு குழுமத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
தற்போது நக்சல்கள் தாக்குதல் எதுவும் இல்லை எனிமும், வரும் காலங்களில் அப்படி எதுவும் நிகழ்ந்தால் கூட, அதனை முறியடிக்கும் வகையில் இந்த பயிற்சி நடத்தப்பட்டது.
தமிழக கடல்பகுதியில் தற்போதுள்ள 60 சோதனை சாவடிகளுடன், மேலும் 40 அமைக்கப்பட வேண்டும். தற்போது 18 சோதனை சாவடிகள் அமைக்க அனுமதி பெறப்பட்டுள்ளது. மேலும் அனைத்து நிலப்பரப்புகளிலும் பயன்படுத்த இயலும் வகையில் 4 சக்கரங்களைக் கொண்ட நவீன ரக பைக் விரைவில் வாங்கப்படும் என்றார்.