திமுக - தேமுதிக தொண்டர்கள் கடும் மோதல்
கம்பம்: கம்பம் தொகுதிக்குட்பட்ட அம்மாபட்டி என்ற இடத்தில் விஜயகாந்த வருகைக்கு முன்னதாக திமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கம்பம் தொகுதியில் தே.மு.தி.க. சார்பில் அருண்குமார் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள கட்சியின் தலைவர் விஜயகாந்த் நேற்று மாலை கம்பம் தொகுதிக்கு வந்தார்.
உத்தமபாளையம் அடுத்துள்ள அம்மாபட்டியில் இருந்து விஜயகாந்த் பிரசாரத்தை மாலை 5.30 மணிக்கு தொடங்குவதாக இருந்தது. ஆனால் அவர் வந்த வேன் பழுதடைந்த காரணத்தினால் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது.
விஜயகாந்த் வருவதற்கு முன்னதாக தே.மு.தி.க. கட்சியினர் அம்மாபட்டியில் கொடி, தோரணங்கள் கட்டுவதில் மும்முரமாக இருந்தனர். அப்போது சிலர் தி.மு.க. வேட்பாளர் ராமகிருஷ்ணனை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் தேர்தல் அலுவலகத்தில் இருந்த தி.மு.க. தொண்டர்களுக்கும், தே.மு.தி.க. தொண்டர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும், கம்பு, கட்டைகளுடன் அடித்துக் கொண்டனர்.
உடனே போலீசார் விரைந்து வந்து மோதலில் ஈடுபட்டிருந்தவர்களை சமாதானப்படுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
மோதல் சம்பவம் நடந்து ஒரு மணி நேரத்திற்கு பிறகு விஜயகாந்த் அந்த பகுதிக்கு வந்தார். பிரசாரத்தைத் தொடங்கிப் பேசினார்.