இலவச வீட்டுமனை வாங்கி தருவதாக வசூல்-தொண்டு நிறுவனம் மீது குற்றச்சாட்டு !
கரூர்: கரூர் அருகே இலவச வீட்டு மனை, ரூ. 1 லட்சம் வாங்கி தருவதாக கூறி சுய உதவி குழு பெண்களிடம் பணம் வசூல் செய்துள்ளதாக தொண்டு நிறுவனம் ஒன்றின் மீது புகார் கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தொண்டு நிறுவனங்கள் இயங்கும் மாவட்டங்களில் ஒன்று கரூர். குறிப்பாக குளித்தலை, தோகமலை பகுதியில் 30க்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
மாவட்ட மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வெளிநாட்டு நிதியுதவியுடனும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றது. அவற்றில் சில பொய்யான வாக்குறுதி மூலம் ஏமாற்றி பணம் பறிப்பதாக புகார் எழுந்துள்ளது.
குளித்தலை, தோகமலை பகுதியில் உள்ள சுய உதவி குழுக்களில் உள்ள தாழ்த்தப்பட்ட சமுதாய பெண்களிடம், திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ஏர்கலப்பை என்ற தொண்டு நிறுவன ஊழியர்கள் ரூ. 300 வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த தொண்டு நிறுவன ஊழியர்கள் இலவச வீட்டு மனை அல்லது ஒரு ஏக்கர் நிலம், ஒரு லட்சம் ரூபாய் தாட்கோ மூலம் வாங்கி தருவதாக கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் தங்களது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. இதையடுத்து சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து ஏர்கலப்பை நிறுவனத்தின் கருத்தை அறிய முயன்ற போது அவர்கள் தரப்பில் பதில் சொல்ல யாரும் முன் வரவில்லை.
இதையடுத்து சம்மந்தப்பட்ட அமைப்புகள் மீது மாவட்ட நிர்வாகம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சுய உதவி குழுவினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.