சீனாவுக்கு வந்த விமானத்திற்கு குண்டு மிரட்டல் - ஆப்கனுக்கே திருப்பப்பட்டது
பெய்ஜிங்: சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்திற்கு வந்த ஆப்கானிஸ்தான் விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் அந்த விமானத்தை சீன அதிகாரிகள் மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி அனுப்பினர்.
ஜின்ஜியாங் மாகாணத்தில்தான் கடந்த மாதம் பெரும் இனக் கலவரம் வெடித்தது. முஸ்லீம்களுக்கும், சீனர்களுக்கும் இடையே நடந்த மோதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம் சிறுபான்மையினர் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில், ஜின்ஜியாங் மாகாண தலைநகர் உரும்கிக்கு, ஆப்கானிஸ்தானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று கிளம்பியது. அப்போது அந்த விமானத்தில், குண்டு வைக்கப்பட்டிருப்பதாக உரும்கி விமான நிலையத்திற்குத் தகவல் வந்தது.
இதையடுத்து அந்த விமானத்தை தரையிறக்க அனுமதிக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது. இதனால் உரும்கிக்கு வந்த விமானத்தை தரையிறக்க அனுமதிக்காமல் அதை திரும்பவும் ஆப்கானிஸ்தானுக்கே அதிகாரிகள் அனுப்பி விட்டனர்.
முன்னதாக இந்த விமானம் கடத்தப்பட்டதாகவும், காந்தஹாரில் தரையிறக்கப்படட்தாகவும், அதன் பின்னர் அது மீண்டும் உரும்கிக்கு வருவதாகவும் கூறப்பட்டது. ஆனால் கடத்தல் என்ற தகவல் தவறு என பின்னர் தெரிவிக்கப்பட்டது.
இனக் கலவரத்திலிருந்து இப்போதுதான் உரும்கி நகரம் மீண்டு வருகிறது. இந்த நிலையில் பிரச்சினை எதுவும் வந்து விடக் கூடாது என்று பயந்தே சீன அதிகாரிகள் விமானத்தை மீண்டும் ஆப்கானிஸ்தானுக்கே திருப்பி விட்டு விட்டதாக தெரிகிறது.