குறை கேட்க தமிழக அரசுக்கு சைமா கோரிக்கை
திருப்பூர்: பனியன் உற்பத்தியாளர்களுக்கு பல்வேறு பிரச்னைகள் தொடர்ந்து நீடித்து வருவதால், பனியன் மற்றும் ஜாப் ஒர்க் நிறுவனங்களுக்கு குறை தீர்ப்புக் கூட்டம் நடத்த வேண்டும் என சைமா சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து திருப்பூர் சைமா சங்க தலைவர் ஈஸ்வரன் கூறுகையில்,
பனியன் உற்பத்தியாளர்களுக்கு, மத்திய அரசு, புதிய சலுகைகள் எதுவும் அறிவிக்கவில்லை. குறிப்பாக, உள்நாட்டு வர்த்தகத்தில் ஈடுபடும் பனியன் உற்பத்தியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள தொழில் நெருக்கடிக்கு தீர்வு காண அரசு முன்வரவில்லை.
திருப்பூர் பகுதியில் மட்டும் பனியன் உற்பத்தியாளர்கள் 5,000 -க்கும் அதிகமாக உள்ளனர். 3,000 -க்கும் அதிகமான நிறுவனங்கள், தமிழக வர்த்தகத்தை நம்பியே உள்ளன.
ஏற்றுமதி வர்த்தகம் மூலம், 11 ஆயிரம் கோடிக்கு மேல் அன்னிய செலாவணி மத்திய அரசுக்கு கிடைக்கிறது. உள்நாட்டு வர்த்தகம் மூலம் ஆண்டுக்கு 6,000 கோடி ரூபாய் அரசுக்கு கிடைக்கிறது.
மேலும், மூன்று லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ளன.
இந்தியாவிலேயே, ஒரே நகரில் இவ்வளவு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வரும் தொழில் நிறுவனங்கள் திருப்பூரில் மட்டுமே உள்ளன.
ஏற்றுமதி வர்த்தகத்துக்கு அளிக்கும் சலுகைகளை போல், உள்நாட்டு வர்த்தகத்தை ஊக்குவிக்கும் வகையில், சந்தை வாய்ப்பை விரிவுபடுத்தவும், தேவையான சலுகைகள் அரசு மூலம் கிடைப்பதில்லை.
உள்நாட்டு வர்த்தக பனியன் உற்பத்தியாளர்களின் திறனை அதிகப்படுத்தவும், தொழிலை மேம்படுத்தவும் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் மாதம் தோறும் நடத்துவது போன்று பனியன் மற்றும் அதைச் சார்ந்த உபதொழில்களுக்கும், இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது குறை தீர் கூட்டம் நடத்த அரசு முன் வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.