ரூ. 2,000 லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியர் கைது -மதுக் கடையில் வைத்து வளைப்பு
சென்னை: சென்னையில் மின் இணைப்பு வழங்குவதற்காக ரூ. 2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய ஊழியரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னை நெசப்பாக்கம், கண்ணதாசன் தெருவில் வசித்து வரும் சுப்ரமணி தனது வீட்டுக்கு மின் இணைப்பு கேட்டு எம்ஜிஆர் நகர் மின்வாரியத்தில் மனு செய்தார். ஆனால், இவருக்கு பல நாட்கள் ஆகியும் மின் இணைப்பு கிடைக்கவில்லை.
இதையடு்தது அவர் மின்வாரிய கமர்சியல் அதிகாரி ராஜேந்திரன் (46) என்பவரை நேரில் சந்தித்து கேட்டுள்ளார். அப்போது அவர் ரூ. 2 ஆயிரம் லஞ்சம் தந்தால் மட்டுமே இணைப்பு தர முடியும் என பேரம் பேசியுள்ளார்.
இதையடுத்து சுப்ரமணி லஞ்ச ஒழிப்பு போலீசாரை தொடர்பு கொண்டார். அவர்களின் அறிவுரைப்படி சுப்ரமணி ரூ. 2 ஆயிரம் கொண்டு வருவதாக ராஜேந்திரனிடம் தெரிவித்துள்ளார். அப்போது ராஜேந்திரன் மாலை 5 மணிக்கு வரும்படி கூறியுள்ளார்.
அதன்படி மாலை 5 மணிக்கு சென்ற சுப்ரமணி பணத்தை கொடுத்துவிட்டு வந்தார். பின்னர் அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் பணத்தை கொடுத்த தகவலை தெரிவித்தார்.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை பிடிக்க அலுவலகத்துக்கு சென்றனர். ஆனால், அவர் அலுவலகத்தில் இல்லை. அருகிலிருந்த மதுக்கடைக்கு சென்றுவிட்டார். அங்கு விரைந்து சென்ற லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை சுற்றி வளைத்தனர்.
போலீசாரை பார்த்த ராஜேந்திரன் கையிலிருந்த லஞ்ச பணத்தில் மூன்று 500 ரூபாய் நோட்டுக்களை மதுக்கடை கல்லாவுக்குள் வீசியெறிந்தார். நான்காவது நோட்டை எறியும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை மடக்கி பிடித்தனர்.
மற்ற மூன்று ரூ. 500 தாள்களையும் தேடி பிடித்தனர். போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications