'முகவரி இல்லாத ராமதாஸ்'-இளங்கோவன் தாக்கு
கோவை: டெல்லியில் தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காதற்கு, எனக்கு கடிதம் வந்து சேரவில்லை என்று ராமதாஸ் காரணம் கூறியுள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரமாக முகவரி இல்லாதவராகப் போய் விடுவார் என்று நான் நினைக்கவில்லை என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
கோவையில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
மின்னணு ஓட்டுப்பதிவு எந்திரத்தில் தவறு செய்ய முடியும் என்று கூறி இடைத் தேர்தலைப் புறக்கணித்த எதிர்க்கட்சியினர், அதை நிரூபிக்கத் தயாராக இல்லை.
டெல்லியில் தேர்தல் கமிஷன் நடத்திய கூட்டத்தில் பங்கேற்காததற்கு, எனக்கு கடிதம் வந்து சேரவில்லை என்று ராமதாஸ் காரணம் கூறியுள்ளார். அவர் இவ்வளவு சீக்கிரமாக முகவரி இல்லாதவராகப் போய் விடுவார் என்று நான் நினைக்கவில்லை.
லோக்சபா தேர்தலில் சில தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைய கொங்கு முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் தான் காரணம் என்று சொல்ல முடியாது. பல காரணங்களில் அதுவும் ஒன்று.
இடைத் தேர்தலில் எந்த சக்தியாலும் ஆளும் கூட்டணி வெற்றியைத் தடுக்க முடியாது. திமுக அரசை மைனாரிட்டி அரசு என்று ஜெயலலிதா சொல்வதால் தான், அவரை திருமதி என்று கருணாநிதி சொல்கிறார்.
வட மாநிலங்களைப் போல அரசியல் தலைவர்களிடையே ஒற்றுமை இல்லாததும், தனிப்பட்ட முறையிலான விமர்சனங்கள் நடப்பதும், தமிழகத்தின் துரதிருஷ்டம்.
காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகம் அதிகமாக இருப்பதால், சில விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டு, பத்திரிகைகளில் வெளிவந்து விடுகின்றன.
எங்களது கட்சியில் எத்தனைக் கோஷ்டி இருந்தாலும், அத்தனைக் கோஷ்டிக்கும் தலைவர் சோனியா தான்.
மத்திய அமைச்சரவையில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகக் கூறுவதை ஏற்க முடியாது. கப்பல் போன்ற முக்கியமான துறைகள், தமிழகத்துக்குத் தரப்பட்டுள்ளன.
தமிழக அமைச்சரவையில் பங்கு கிடைக்காததால், காங்கிரஸ் கட்சி தொண்டர்களிடம் சோர்வு இருப்பதாகக் கூறப்படுகிறது. 1967க்குப் பின் ஆட்சிக்கு வர முடியவில்லையே என்ற சோர்வு அவர்களிடம் இருக்கிறது. அது விரைவில் நீங்கும்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைப்பது என்பது எங்கள் கனவு இல்லை, லட்சியம்.
நேற்று துவங்கிய கட்சித் தலைவர் கூட, தமிழகத்தில் ஆட்சி அமைப்போம் என்று சொல்லும் போது, காங்கிரஸ் சொல்வதில் தவறில்லை.












Click it and Unblock the Notifications