யுஎஸ் ஏவுகணை தாக்குதல்-பாகிஸ்தானில் 14 பேர் பலி
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உள்ள வசிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 14 பேர் பலியானார்கள்.
அமெரிக்காவில் உலக வர்த்தக மையத்தில் அல்-கொய்தா தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து அமெரிக்கா, ஆப்கானிஸ்தானில் இருந்த அல்-கொய்தா மற்றும் தாலிபான் தீவிரவாதிகளை விரட்டியடித்து, அங்கு புதிய ஆட்சியை கொண்டு வந்தது.
அப்பகுதியில் இருந்து வெளியேறிய தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் வசிரிஸ்தான் பகுதியில் பதுங்கியுள்ளனர்.
இதையடுத்து அமெரிக்க ராணுவம் ஆளில்லாத விமானங்கள் மூலம் அப்பகுதியில் தொடர்ந்து ஏவுகணைத் தாக்குதலை நடத்தி வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் தாலிபான் பாகிஸ்தான் பிரிவு தலைவர் பைதுல்லா மெக்சுத் பலியானதாக கூறப்பட்டது.
ஆனால், தாலிபான்கள் இதை ஏற்க மறுத்துவிட்டனர். அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று அமெரிக்க விமானங்கள் தெற்கு வசிரிஸ்தான் பகுதியில் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 14 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த தாக்குதலை பாகிஸ்தான் உளவுத்துறை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
இது குறித்து தாலிபான் செய்தி தொடர்பாளர் அசம் தாரிக் என்பவர் கூறுகையில்,
அமெரிக்க ஏவுகணை தெற்கு வசிர்ஸ்தானில் உள்ள ஒரு வீட்டில் விழுந்து 6 பொது மக்கள் பலியானார்கள். இதில் தாலிபான்கள் யாரும் பலியாகவில்லை. தாக்குதல் நடந்த இடத்தில் அப்பாவி மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். பைதுல்லா மெக்சுத் உயிருடன் இருக்கிறார் என்பதை நான் மீண்டும் உறுதி செய்கிறேன். அவர் நன்றாக இருக்கிறார் என்றார் தாரிக்.












Click it and Unblock the Notifications