தபால் நிலையத்தில் மின் கட்டணம்-அக்டோபரில் அறிமுகம்
சென்னை: தமிழகத்தில் வரும் அக்டோபர் மாதம் தேதி முதல் தபால் நிலையங்களில் மின் கட்டணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
மின் கட்டணம் செலுத்துவதற்குள் குடும்ப தலைவர்கள் படும்பாடு பெரும்பாடு தான். அதுவும் கட்டணம் செலுத்த கடைசி தேதி அன்று சென்றால், அவ்வளவு தான். அங்கே காத்திருக்கும் வரிசையை பார்த்து பலரும் மயக்கம் போட்டுவிடுவார்கள். அந்த அளவுக்கு கூட்டம் கடுமையாக இருக்கும்.
இதையடுத்து பொது மக்களின் இந்த குறையை தீர்க்க சென்னை நகரில் மின் வாரியம், அண்ணா சாலை, வாலாஜா ரோடு, செளகார்பேட்டை, தி.நகர் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் தானியங்கி மின்கட்டண மையங்களை அமைத்துள்ளது. இதன் மூலம் சுமார் 11 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தி வருகிறார்கள்.
மேலும், ஆன்லைனில் மின் கட்டணம் செலுத்தும் வசதியையும் ஏற்கனவே அறிமுகப்படுத்தியுள்ளது. இதை 22 ஆயிரம் பேர் பயன்படுத்தி வருகிறார்கள். என்றாலும் மின் வாரியத்தில் கூட்டம் குறைந்தபாடில்லை.
இதையடுத்து சென்னையில் 15 முதல் 20 புதிய தானியங்கி மின் கட்டண எந்திரங்களை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது இன்னும் இரண்டு மாதத்துக்குள் அமைக்கப்படும் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.
மின் கணக்கெடுப்புக்கு பின் 15 நாட்களுக்கு பணம் கட்ட வேண்டும் என்பதை மேலும் 5 நாள் உயர்த்தி 20 ஆக மாற்றி உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் செப்டம்பர் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.
இதை தொடர்ந்து தற்போது தபால் நிலையங்களில் மின்சார கட்டணம் செலுத்தும் முறை குறித்து அத்துறையுடன், மின் வாரியம் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதையடுத்து தேவையான கம்ப்யூட்டர் தொழில்நுட்ப பணிகள் தற்போது நடந்து வருகின்றன.
விரைவில் இந்த பணிகள் முடிக்கப்பட்டு வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் இது அமல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதலில் இந்த திட்டம் சென்னையில் துவங்கும் இந்த திட்டம். பின்னர் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்தப்படும்.












Click it and Unblock the Notifications